Cauvery Issue: தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் தர முடியாது.. உச்சநீதிமன்றத்தை நாடுவோம் – கர்நாடகா

Karnataka CM Siddaramaiah

கர்நாடகா – தமிழ்நாடு இடையே காவிரி நதிநீர் பங்கீடு குறித்த பிரச்சனை தீவிரமாகி வருகிறது. காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு உரிய நீரை வழங்காததால் தமிழக அரசு உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளது. காவிரியில் இருந்து கூடுதல் நீர் திறக்க வேண்டும் என கோரிக்கையையும் வைத்துள்ளது. ஆனால், கர்நாடகத்தில் நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையவில்லை என்பதால் தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து நீர் திறக்க முடியாது என்று கர்நாடக அரசு திட்டவட்டமாக தெரிவித்து வருகிறது.

இதனால் இரு மாநிலங்களிடையே காவிரி நீர் பிரச்சனை நீடித்து வருகிறது. இந்த சமயத்தில் கடந்த மாதம் 29-ம் தேதி முதல் 15 நாட்களுக்கு (12-ம் தேதி வரை) தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி, 4 ஆயிரத்து 293 கன அடி நீர் காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டதாக கூறப்பட்டது.

அதன்பிறகு 30-ம் தேதி முதல் கடந்த 7-ம் தேதி வரை 9 நாட்கள் சராசரியாக வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. தமிழ்நாட்டிற்கு குறைவான நீர் திறக்கப்படுகிறது என்றும் கூடுதல் நீர் திறக்க வேண்டும் எனவும் தமிழக அரசின் கோரிக்கையாக இருந்து வருகிறது. இந்த சமயத்தில் , தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 5000 கனஅடி வீதம் தண்ணீரை திறக்க வேண்டும் என காவிரி ஒழுங்காற்று மையம் டெல்லியில் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் பரிந்துரை செய்துள்ளது.

இந்த பரிந்துரையை கர்நாடக அரசு ஏற்காவிட்டால் தமிழக அரசு அடுத்ததாக காவிரி மேலாண்மை வாரியம், உச்ச நீதிமன்றம் சென்று முறையிடும் என கூறப்பட்டது. இந்த சூழலில், இன்று அனைத்து கட்சி கூட்டத்தை கர்நாடக முதல்வர் சித்தாராமையா கூறியிருந்தார். இந்த கூட்டமானது பெங்களூரில் உள்ள விதான சவுதாவில் நடைபெற்றது. இன்றைய அனைத்து கட்சி கூட்டத்தில் காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம், மேகதாது அணை கட்டும் நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கர்நாடகவில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கூடாது என முடிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் 123 ஆண்டுகளில் இல்லாத அளவில் வறட்சி நிலவுவதால், காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

53டிஎம்சி நீர் மட்டுமே உள்ளதால் தமிழகத்திற்கு நீர் திறந்து விடக்கூடிய சூழல் இல்லை என்றும் கர்நாடகத்தின் நீர் தேவையை பூர்த்தி செய்யவே 70டிஎம்சி தண்ணீர் தேவைப்படுகிறது எனவும் முதலமைச்சர் சித்தராமையா கூறியுள்ளார். இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தை அணுகி காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழுவிடம் மனு தாக்கல் செய்வோம் என்று அனைத்துக்கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் சித்தராமையா கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்