நம் அண்டை மாநிலமான கர்நாடக மாநிலத்தின் துமகூரை சேர்ந்த ஆசிரியர் ரிஸ்வான் பாஷா. இவரது மகன் சாஹில் ஹுசேன். இவர், கடந்த மூன்று ஆண்டாக சீனாவின் வான்லி மாவட்டத்தில் உள்ள, ‘நாச்சிங் நகரில், ‘ஜியாங்சி யுனிவர்சிட்டி ஆப் டிரடிஷனல் அன்ட் சைனிஸ் மெடிசன்ஸ்’ பல்கலைக்கழகத்தில் தங்கி மருத்துவம் படித்து வருகிறார். தற்போது சீனாவில், ‘கொரோனா’ வைரஸ் பரவியதை தொடர்ந்து, பல்கலைக்கழகத்தில் படிக்கும், 1,000க்கும் மேற்பட்டோர், சொந்த நாட்டிற்கு சென்று விட்டனர். சில மாணவர்கள், ஊழியர்கள் மட்டுமே, பல்கலைக்கழகத்தில் தங்கி உள்ளனர். இதில், துமகூரை சேர்ந்த சாஹில் ஹுசேனும் ஒருவர்.
unknown nodeஇவரது தந்தை, தொலைபேசி மூலம் வீட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். அதற்கு அவர் மகன், ‘தற்போது நான் நலமாக உள்ளேன். எனக்கு எந்த நோய் பாதிப்பும் இல்லை. சீனாவிலிருந்து கர்நாடகாவுக்கு நேரடியாக விமான சேவை இல்லை. மூன்று விமானம் மாற வேண்டும். ‘இந்தியா வரும் போது வழியில், ‘கொரோனா’ வைரஸ் பரவ வாய்ப்புள்ளது. எனவே நான் அங்கு வந்தால், என் மூலம் கொரோனாவை பரப்ப நான் விருப்பமில்லை,’ என கூறி வர மறுத்து விட்டாராம். இந்த தகவல் தற்போது இணையத்தில் பரவி வைரலாகி உள்ளது. என் மூலம் இந்த நோய் பரவ எனக்கு விருப்பமில்லை என கூறிய அந்த இளைஞரின் பண்பு அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.