கேரளாவில் கொரோனா கட்டுப்பாடுகளை அதிகப்படுத்த வேண்டும் – மத்திய அரசு!

The Central Government has ordered the increase of corona restrictions in Kerala.

கேரளாவில் கொரோனா கட்டுப்பாடுகளை அதிகப்படுத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் கொரோனாவை ஒழிக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நாடு முழுவதும் தற்பொழுது கொரோனாவின் தாக்கம் குறைந்திருந்தாலும், கேரள மாநிலத்தில் மட்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக கடந்த 3 நாட்களாக கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் 30 ஆயிரத்தை தாண்டி வருகிறது. இந்நிலையில், இது குறித்து அம்மாநில தலைமை செயலருக்கு மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், இந்தியாவில் கேரளாவில் மிகவும் உச்சத்தில் இருப்பது கவலை அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.

நாட்டில் கேரள மாநிலத்தில் தான் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளதாகவும், ஓணம் பண்டிகைக்கு பிறகு  சமீபத்திய கொரோனா பாதிப்பு கடுமையாக அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளை கண்டறிந்து கொரோனா ஒழிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும், கொரோணா பரிசோதனையை விரைவுபடுத்துவதுடன் தடுப்பூசி போடும் பணியையும் துரிதப்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.