இந்தியாவின் தேசிய விலங்காக பசுவை அறிவிக்க வேண்டும் – அலகாபாத் உயர்நீதிமன்றம்!

The Allahabad High Court has ruled that the cow should be declared a national animal and that the country will prosper only if the cow is respected.

பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் எனவும், பசுவை மதித்தால் மட்டுமே நாடு செழிக்கும் எனவும் அலகாபாத் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஜாவேத் என்பவர் மீது பசுவதை தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் இவருக்கு ஜாமீன் வழங்க மறுத்து அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் இது குறித்து நீதிபதி சேகர் குமார் யாதவ் தலைமையிலான உயர் நீதிமன்ற அமர்வு, பசுக்களுக்கு அடிப்படை உரிமைகளை வழங்குவதற்கான மசோதாவை அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டுமென தெரிவித்துள்ளது.

மேலும் பசு பாதுகாப்பு பணி ஒரு மதத்தின் பணி மட்டுமல்லாமல், பசு இந்தியாவின் கலாச்சாரம். மதத்தை பொருட்படுத்தாமல் நாட்டில் வாழக்கூடிய ஒவ்வொரு குடிமகனின் கலாச்சாரத்தையும் காப்பாற்றும் பணி இது என தெரிவித்துள்ளது. மேலும் வெவ்வேறு மதங்களை சார்ந்த மக்கள் வாழக்கூடிய இந்திய நாட்டில், அவர்கள் வித்தியாசமாக வழிபடலாம். ஆனால் அவர்களின் சிந்தனை நாட்டிற்கு ஒன்று தான் எனவும் நீதிமன்றம் சார்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக உயர்நீதிமன்றம் தெரிவித்த கருத்தில் அரசு கோசாலைகளை கட்டுகிறது. ஆனால் பசுவை பராமரிக்க வேண்டிய மக்கள் மாடுகளை கவனிப்பதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தனியார் கோசாலைகளும் இன்று போலித்தனமானதாக மாறிவிட்டதாகவும், பொது மக்களிடம் நன்கொடை பெற்று அரசாங்கத்தின் உதவியுடன் பசு ஊக்குவிப்பு என்ற பெயரில் போலித்தனமாக தொழில் செய்கிறார்கள் எனவும், சொந்த நலனுக்காக அதை செலவிட்டு பசுவை கவனித்துக் கொள்ளாமல் விட்டு விடுகிறார்கள் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் பசுவை மதித்தால் மட்டுமே நாடு செழிக்கும். இந்திய கலாச்சாரத்தின் அங்கமான பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் எனவும் அலகாபாத் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.