டிரம்ப் கொடுத்த மிரட்டலால் நின்றதா போர்? இந்தியா தரப்பு கொடுத்த விளக்கம்?
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான மோதலை தடுத்து நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியதை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது.

டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. போர் நிறுத்தம் செய்யப்பட்டது முதல் அதற்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தான் முதல் ஆளாக தனது சமூக வலைத்தள பக்கங்களில் அறிவித்திருந்தார்.
எனவே, இந்தியா VS பாகிஸ்தான் போர் நிறுத்தம் ட்ரம்ப் எதற்காக அறிவித்தார் என்கிற கேள்விகளும் எழுந்தது. இந்த சூழலில், நேற்று மோதலை நிறுத்தாவிட்டால் வர்த்தகம் செய்ய மாட்டேன் எனக் கூறி இந்தியா – பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியதாகவும் தகவல்கள் பரவியது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அப்படி கூறிய நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தின் கோரிக்கையை ஏற்றுதான் சண்டை நிறுத்தப்பட்டதாக பிரதமர் மோடி நேற்று பேசியிருந்தார். எனவே, இதன் காரணமாக குழப்பம் ஏற்பட்ட நிலையில் தற்போது டிரம்ப்பின் பேச்சை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் தொடங்கிய பின்னர் அமெரிக்க துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸ் மற்றும் வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ ஆகியோர் இந்திய பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருடன் நடத்திய பேச்சுவார்த்தைகளில் வர்த்தகம் குறித்து எந்த விவாதமும் இல்லை எனவும் திட்டவட்டமாக மத்திய அரசு வட்டாரங்களில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டதாகவும் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளது.
ஆனால் இது தொடர்பாக இந்திய அரசு சார்பில் எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் இதுவரை வெளியிடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. AHindinews, CNBC Awaaz உள்ளிட்ட செய்தி நிறுவனங்கள் இந்த செய்திகளை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.