தடுப்பூசிகளை இணைத்து பயன்படுத்தினால் நல்ல பலன் – ICMR அறிவிப்பு..!

Good results from combined use of vaccines - ICMR announcement ..!

கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை இணைத்து பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும் என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை தீவிரமாக பரவிய நிலையில் அதனைக் கட்டுப்படுத்த  கோவாக்சின் ,கோவிஷீல்டு போன்ற தடுப்பூசி மருந்துகள் மக்களுக்கு செலுத்தப்பட்டன.ஆரம்பத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு மக்கள் தயங்கிய நிலையில்,தற்போது அதிக அளவிலான மக்கள் தடுப்போசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.இதனைத் தொடர்ந்து,ஸ்புட்னிக் ,பைஸர் போன்ற தடுப்பூசிகளுக்கும் அவசரகால பயன்பாட்டு அனுமதியை மத்திய அரசு வழங்கியது.இந்த தடுப்பூசி மருந்துகள் இரண்டு தவணைகளாக செலுத்தும் வகையில் உள்ளன.

ஆனால்,நேற்று ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி மருந்துக்கு மத்திய அரசு அவசரகால பயன்பாட்டு அனுமதியை வழங்கியது.இந்த தடுப்பூசி மருந்தினை ஒரு டோஸ் மட்டுமே செலுத்திக் கொண்டால் போதுமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில்,வெளிநாடுகளில் இரு வேறு நிறுவனத்தின் தடுப்பூசி மருந்துகளை கலவையாக செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு செய்வது இந்தியாவிலும் சாத்தியமா? என்று அறிய கடந்த மாதம், இந்தியாவின் மருந்து ஒழுங்குபடுத்தும் நிபுணர் குழு, டிசிஜிஐ, கோவிஷீல்ட் மற்றும் கோவாக்ஸின் தடுப்பூசிகளின் கலவை அளவுகள் குறித்து ஆய்வு நடத்த பரிந்துரைத்தது.

இந்நிலையில்,கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை இணைத்து பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும் என்று ஐசிஎம்ஆர் (ICMR) தெரிவித்துள்ளது.

மேலும்,ஒருவர் ஒரு டோஸ் கோவிஷீல்டும்,இரண்டாவது டோஸ் கோவாக்சினும் செலுத்திக் கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.