ஹரியானா மாநிலத்தில் நுஹ் மாவட்டத்தில் கடந்த திங்களன்று இந்து அமைப்பினர் ஊர்வலம் செல்லும் போது இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட வன்முறை கலவரமாக மாறியது. இதில் இதுவரை 2 ஊர்காவலப்படை காவலர்கள், 4 பொதுமக்கள் என 6 பேர் இந்த வன்முறை சம்பவங்களில் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, ஹரியானா மட்டுமின்றி டெல்லியிலும் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. டெல்லியில் பஜிரங் தள் அமைப்பை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டதால் காவல்துறையினர் டெல்லியிலும் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக இதுவரை 116 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நுஹ் மாவட்டத்தில் கலவரம் ஏற்பட்ட காரணத்தால் சுற்றுவட்டாரத்தில் 7 மாவட்டங்களில் 144 தடை விதிக்கப்பட்டு உள்ளது. அங்குள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இரு பிரிவினர் இடையே மோதல்கள் ஏற்பட்டதையடுத்து, நுஹ், ஃபரிதாபாத் மற்றும் பல்வால் மாவட்டங்களில் ஆகஸ்ட் 5 வரை மொபைல் இணைய சேவைகள் நிறுத்தப்படும் என்று ஹரியானா அரசு தெரிவித்துள்ளது. குருகிராம் மாவட்டத்தின் சோஹ்னா, பட்டோடி மற்றும் மனேசர் ஆகிய பகுதிகளிலும் இணைய சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்கள் மூலம் தவறான தகவல்கள் மற்றும் வதந்திகள் பரப்பப்படுவதை தடுக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
