பாஜகவின் தடுப்பூசியை எப்படி நம்புவது? நாங்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள மாட்டோம் – அகிலேஷ் யாதவ்!

Former UP CM Akhilesh Yadav has said that how can we trust the corona vaccine developed by the BJP government and will not be vaccinated.

பாஜக அரசால் உருவாக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசியை நாங்கள் எப்படி நம்புவது எனவும் இந்தத் தடுப்பூசி போட்டுக் கொள்ள மாட்டோம் எனவும் உத்திரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் அவர்கள் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸால் கடந்த ஒரு வருடமாக உலகம் முழுவதும் உள்ள  பல லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ள நிலையில், கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு தற்பொழுதும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்த கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி மற்றும் தடுப்பு மருந்துகள் பல இடங்களில் கண்டறியப்பட்டு வந்த நிலையில், இந்தியாவிலும் இதற்கான தடுப்பூசி கண்டறியப்பட்டது. அதன்படி இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும், அஸ்டராஜெனகா நிறுவனமும் இணைந்து இந்தியாவில் தடுப்பூசியை உருவாக்கியது. கோவிஷீல்ட் என பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசி குறித்து பரிசோதனை செய்ததில் நல்ல பலன் கிடைத்ததாக சீரம் இன்ஸ்டியூட் நிறுவனம் தெரிவித்திருந்தது.

மேலும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்திடம் தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அனுமதிக்குமாறு விண்ணப்பித்திருந்தது. இதையடுத்து மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்புக்கு நிபுணர் குழு பரிந்துரை வழங்கியது. இதனை அடுத்து இன்னும் சில நாட்களில் அவசர காலத்தில், மக்கள் பயன்பாட்டிற்காக இந்தியாவில் கோவிஷீல்ட் தடுப்பூசி கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சமாஜ்வாத கட்சி தலைவரும், உத்திர பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியுமாகிய அகிலேஷ் யாதவ் அவர்கள், தற்பொழுதைக்கு தான் தடுப்பூசி போட்டுக்கொள்ள மாட்டேன் எனவும், பாஜக அரசின் தடுப்பூசியை நான் எப்படி நம்புவது,  எங்கள் அரசு எப்போது அமையுமோ அப்போது அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும். அப்பொழுது தான் நாங்களும் போட்டுக் கொள்வோம் எனவும் கூறியுள்ளார்.