3 வது முறை அமையவுள்ள எனது ஆட்சியில், இந்தியா உலகின் 3-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக மாறும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மைய (IECC) வளாகம் மறுசீரமைக்கப்பட்டு பிரதமர் மோடி திறந்து வைத்தார். பாரத் மண்டபம் என மறுபெயரிடப்பட்ட அதன் திறப்பு விழாவில் பேசிய பிரதமர் மோடி, தனது மூன்றாவது ஆட்சியில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும் என்றும், நாட்டின் வளர்ச்சிப் பயணம் நிறுத்தப் போவதில்லை என்றும் அவர் கூறினார்.
நிதி ஆயோக் அறிக்கையின் தரவுகளை, சுட்டிக்காட்டிய பிரதமர், கடந்த ஐந்து ஆண்டுகளில் 13.5 கோடி மக்கள் வறுமையில் இருந்து வெளிவந்துள்ளனர். கடந்த ஒன்பது ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சிக்கு எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் கொள்கைகள் நாட்டை சரியான திசையில் கொண்டு செல்கின்றன என அவர் தெரிவித்தார்.
இந்த சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மைய வளாகம் (IECC), செப்டம்பரில் இந்தியா தலைமையில் நடக்கும் ஜி-20 உச்சிமாநாட்டை நடத்துகிறது, இந்த மாநாட்டில் அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா உள்ளிட்ட 20 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
