இந்தியா-கனடா விவகாரம்: இரு நாடுகளின் மீதும் எங்களுக்கு அக்கறை உள்ளது.! அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி

இந்தியா – கனடா நாடுகளுக்கு இடையே உள்ள உறவில் கடந்த சில வாரங்களாக விரிசல் ஏற்பட்டுள்ளது. அதன்படி, கடந்த ஜூன் 18ம் தேதி காலிஸ்தான் அமைப்பை சேர்ந்த ஹர்தீப் சிங் நிஜார் எனும் பிரிவினைவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவத்திற்கும் இந்தியாவிற்கும் சம்பந்தம் இருப்பதாக கனடா பிரதமர் ட்ரூடோ குற்றம் சாட்டினார்.
இதைத்தொடர்ந்து இந்தியாவும், கனடாவும் அந்தந்த நாடுகளில் உள்ள தூதர்களை வெளியேற்ற உத்தரவிட்டன. தொடர்ந்து, கனடாவில் இருந்து இந்தியா வருவதற்கு வழங்கப்படும் விசாவை தற்காலிகமாக நிறுத்த சொல்லி கனடா நாட்டில் உள்ள இந்திய தூதரகத்திற்க்கு மத்திய அரசு அறிவுறுத்தியது. இதனால் கனடாவில் இருந்து யாரும் இந்தியா வரமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், 13வது இந்திய-பசிபிக் ராணுவத் தலைவர்கள் மாநாடு ஆனது புதுடெல்லியில் நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் 35 நாடுகளின் ராணுவ தளபதிகள் பங்கேற்கின்றனர். இதில் பங்கேற்க வந்துள்ள இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி இந்தியா மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளுடனான உறவில் அமெரிக்கா அக்கறை கொண்டுள்ளது என்று கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது, “நாங்கள் இரு நாடுகளின் மீதும் அக்கறை கொள்கிறோம். அவர்களின் உறவைப் பற்றி நாங்கள் அக்கறை கொள்கிறோம். இருவருடனும் எங்கள் உறவு உறுதியானது. மேலும் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை தீவிரமாக எடுத்துக் கொள்ளும் நாடுகளாக நாம் ஒன்றிணைவதை நாம் அனைவரும் உறுதி செய்ய வேண்டும். எங்கள் உறவின் திறனை தீவிரமாக எடுத்துக் கொள்ளுங்கள்” என்று எரிக் கார்செட்டி கூறினார்.
இதற்கிடையில், 13 வது ஐபிஏசிசி மாநாட்டில் கலந்து கொண்ட எரிக் கார்செட்டி, இந்தியா மீண்டும் உலகெங்கிலும் உள்ள மாணவர்களின் முதல் ஆதாரமாக இருக்கும். அமெரிக்கா 25 சதவீத வெளிநாட்டு மாணவர்களை இந்தியாவில் இருந்து மட்டும் எதிர்பார்க்கிறது. இந்தியாவில் 1 மில்லியன் விசா விண்ணப்பத்தை அடைய உள்ளோம். இது ஒரு புத்தம் புதிய சாதனையாகவும் இருக்கும்,” என்று கார்செட்டி கூறினார்.
இதற்கு முன்னதாக, மாநாட்டில் கலந்து கொள்ள வந்த கனடாவின் துணை ராணுவ தளபதி மேஜர் ஜெனரல் பீட்டர் ஸ்காட், “எங்கள் அரசாங்கத்தின் நிலைப்பாடு, விசாரணையில் இந்தியா பங்கேற்க வேண்டும் மற்றும் ஒத்துழைக்க வேண்டும். இது ஒரு அரசியல் பிரச்சினை. இதனை அரசியல் தலைவர்களே சமாளிப்பார்கள். இராணுவம் முதல் இராணுவம் வரை உறவுகளை கட்டியெழுப்ப நாங்கள் இங்கு வந்திருக்கிறோம்.” என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.