தமிழில் உறுதிமொழி ஏற்று மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார் கமல்ஹாசன்.!
மாநிலங்களவை எம்.பி.யாக தமிழில் உறுதி மொழி ஏற்று மக்கள் நீதி மய்யக் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பதவியேற்று கொண்டார்.

டெல்லி : நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று (ஜூலை 25, 2025) மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றார். பதவியேற்றுக் கொண்ட கமல்ஹாசன் உறுப்பினர் பதவியேற்பு ஆவணங்களில் கையெழுத்திட்டார். தமிழில் தனது முதல் குரலை நாடாளுமன்றத்தில் கமல்ஹாசன் பதிவு செய்தார்.
அவரைத் தொடர்ந்து திமுகவின் சல்மா, சிவலிங்கம் மற்றும் வில்சன் ஆகியோர் அடுத்தடுத்து தமிழ் மொழியில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியின் ஆதரவுடன் மக்கள் நீதி மய்யம் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில், இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் பதவிப் பிரமாணம் எடுத்து தனது பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டார். இந்தியனாக தனது கடமையை ஆற்றுவேன் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்தச் சந்தர்ப்பத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பலரும் கமல்ஹாசனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.