கேரளாவில் ரயிலுக்கு தீ வைத்தது தொடர்பாக விசாரிக்க விசாரணைக்குழு அமைத்தது மாநில அரசு.
கேரளாவில் கோழிக்கோடு மாவட்டம் எலத்தூர் அருகே ஓடும் ரயிலுக்குள் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இரண்டு பாட்டில் பெட்ரோல் உடன் ரயிலின் உள்ளே புகுந்து சகபயணி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். தீ படர்ந்து பற்றி எரிவதை பார்த்த சக பயணிகள் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்த முயற்சி செய்தனர்.
மேலும், தீக்கு பயந்து ரயிலில் இருந்து குதித்த குழந்தை உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவம் நடந்த ரயில் பாதைக்கு அருகில் ஒரு குழந்தை உட்பட 3 பேரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதற்கிடையில், இந்த சம்பவத்தில் காயமடைந்த 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதில் 2 பேர் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார்கள்.
இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் முன்னதாக வெளியாகி, அதனை அடிப்படையாக வைத்து காவல்துறை குற்றவாளியின் மாதிரி வரைபடத்தை வெளியீட்டு அந்த நபரை தீவீரமாக தேடிவந்த நிலையில் ரயிலுக்கு தீ வைத்த சம்பவத்தை விசாரிக்க அம்மாநில அரசு சிறப்பு புலனாய்வு குழு அமைத்துள்ளது. மேலும், ஓடும் ரயிலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த அடையாளம் தெரியாத நபர் நொய்டாவைச் சேர்ந்தவர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.