மகாராஷ்டிரா தொழிற்சாலையில் தீ விபத்து – ஒருவர் பலி; 5 பேர் காயம்!

One person has been killed and five others injured in a fire at a factory in Maharashtra.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், 5 பேர் காயமடைந்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலம் போய்சாரில் உள்ள ஜகாரியா ஃபேப்ரிக் லிமிடெட் எனும் தொழிற்சாலையில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ மளமளவென பரவத் தொடங்கியதால், உடனடியாக தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் சம்பவ இடத்திலிருந்து உயிரிழந்த ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து காவல் துறையினர் கூறுகையில், இந்த பகுதியில் 6 மணியளவில் இந்த தீ விபத்து சம்பவம் நடந்ததாகவும், இந்த விபத்தில் ஒருவர் பலியாகி உள்ளதாகவும், 5 பேர் காயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் உயிரிழந்தவரின் உடல் அதிக அளவு தீயில் கருகி உள்ளதால், உயிரிழந்தது யார் என்பது குறித்து இன்னும் அடையாளம் காண முடியவில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்திற்கு பின்பு அந்த தொழிற்சாலையில் வேலை செய்த 2 தொழிலாளர்கள் காணாமல் போயுள்ளதாகவும், அவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.