மணிப்பூர் கலவரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவிப்பு.
மணிப்பூர் இரு சமூகத்துக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த கலவரத்தில் இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கும் வேலை வழங்கப்படும் என்றும் மத்திய அரசும், மணிப்பூர் மாநில அரசும் நிதிச்சுமையை சமமாக ஏற்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மணிப்பூர் முதல்வர் என் பிரேன் சிங் இடையே நேற்று மாலை நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் யிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு தொகை வழங்குவதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இந்த கூட்டத்தின் போது, வதந்திகளை கட்டுப்படுத்த பிரத்யேக தொலைபேசி இணைப்புகளை அமைக்கவும் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மணிப்பூர் மாநிலத்தில் மே 3-ம் தேதி இரு சமூகத்துக்கு இடையே வன்முறை வெடித்ததில், இதுவரை 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, மணிப்பூர் வன்முறை தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என்று டெல்லியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையிலான குழு மனு அளித்துள்ளது. குடியரசு தலைவரிடம் 12 கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
