மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் முதல் இரண்டு பிரிவினர்கள் இடையே வன்முறை நடந்து வருகிறது. இந்த வன்முறையில் 150க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்ததோடு, பலர் காயமடைந்தனர். மேலும், சிலர் பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் இரண்டு பெண்களை ஒரு கொடூர கும்பல் நிர்வாணப்படுத்தி, சாலையில் இழுத்துச்சென்ற வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதன்பிறகு ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி கீதா மிட்டல் தலைமையில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் ஆஷா மேனன் மற்றும் ஷாலினி ஆகியோர் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவை பல்வேறு சம்பவங்கள் தொடர்பான நிவாரண நடவடிக்கைகள், இழப்பீடு மற்றும் மறுவாழ்வு ஆகியவற்றை மேற்பார்வையிட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
பின், மணிப்பூர் கலவரம் தொடர்பாக முன்னாள் நீதிபதி கீதா மிட்டல் தலைமையிலான குழு உச்சநீதிமன்றத்தில் அறிக்கைகளை தாக்கல் செய்தது. இந்நிலையில், இனக்கலவரம் தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகளை ஆராய்வதற்காக மணிப்பூருக்குச் சென்ற எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா குழுவைச் சேர்ந்த மூவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கூறிய முதல்வர் என் பிரேன் சிங், “மணிப்பூரின் தற்போதைய வழக்கை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்தசூழ்நிலையில், இஜிஐ ஒரு தவறான தகவல் கொண்ட அறிக்கையை முன்வைப்பது கண்டிக்கப்படுகிறது. அத்தகைய அறிக்கை தற்போதைய நெருக்கடியை மோசமாக்கும் அல்லது தீவிரமாக்கும்.”
“இத்தகைய நடவடிக்கையை மாநில அரசு கண்டித்து, மாநிலத்தில்மோதல்களை உருவாக்க முயற்சிக்கும் எடிட்டர்ஸ் கில்ட் உறுப்பினர்கள் மீது மணிப்பூர் மாநில அரசு எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது.” என்று கூறினார். மேலும், எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியாவின் தலைவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
