ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர் தப்பிய ரமேஷ் – புதிய வீடியோ.!

ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர் பிழைத்த நபரின் புதிய அதிர்ச்சி வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Plane crash

அகமதாபாத் :கடந்த வாரத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தின் புதிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த ஜூன் 12 ஆம் தேதி, ஏர் இந்தியா விமானம் மதியம் 1:30 மணிக்குப் பிறகு அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, லண்டன் சர்வதேச விமான நிலையமான கேட்விக் நோக்கிச் செல்ல விருந்தது.

இருப்பினும், புறப்பட்ட சில நிமிடங்களில், அது அருகிலுள்ள பிஜே மருத்துவக் கல்லூரி மற்றும் சிவில் மருத்துவமனையின் விடுதிக் கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். ஒரே ஒரு நபர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

தற்பொழுது, சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் வீடியோவில், உயிர் பிழைத்த விஸ்வாஷ் குமார் ரமேஷ் என்பவர், விபத்து நடந்த இடத்திலிருந்து நடந்து செல்வதைக் காட்டுகிறது. அவர் பின்னணியில் புகை எழும்ப, அருகில் இருந்த சிலர் கூச்சலிடுவதைக் காணலாம்.

unknown node

திடீரென்று, எரியும் இடிபாடுகளில் இருந்து ரமேஷ் வெளியே வருகிறார், அருகில் இருந்தவர்களில் ஒருவர் அவரைக் கண்டார். பின்னர், அந்த நபர் ரமேஷை நோக்கி நடந்து வந்து, அவரது கையைப் பிடித்து, அந்த இடத்திலிருந்து அழைத்துச் செல்கிறார்.  விபத்தில் சிக்கிய  AI171 விமானத்தில் 11A இருக்கையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஸ்வாஷ் குமார் ரமேஷ் பிரிட்டிஷ் நாட்டவர் என்று தெரிய வந்துள்ளது.

இதற்கிடையில், விமான விபத்தில் பலியானோரின் உடல்களை அடையாளம் காணும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. DNA சோதனை நடத்தப்பட்டு 87 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில், 47 உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 242 பேர் பயணித்த விமானத்தில் 241 பேர் மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது.மேலும், விமானம் ஹாஸ்டல் மீது விழுந்ததில் 33 பேர் மரணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.