புத்தாண்டு வாழ்த்து செய்தி ”எதிர் செயல் செய்யாமல் விழிப்புணர்வாக பதில் செயல் செய்வோம்” சத்குருவின் புத்தாண்டு வாழ்த்து செய்தி.!

Isha Foundation founder Satguru says corona damage can be solved with human energy that responds consciously without reacting

எதிர் செயல் செய்யாமல் விழிப்புணர்வாக பதில் செயல் செய்யும் மனித ஆற்றலின் மூலம் கொரோனா பாதிப்புக்கு தீர்வு காண முடியும் என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார். ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி: நம் அனைவர் வாழ்வையும் தலைகீழாக புரட்டிப்போட்டதில், 2020ம் ஆண்டு இந்த தலைமுறை மீது அழிக்க முடியாத சுவடை பதித்திருக்கிறது. கடந்த நூற்றாண்டைத் திரும்பிப் பார்த்தால், போர்கள், பெருந்தொற்றுகள் மற்றும் இயற்கை பேரிடர்களைப் பொறுத்தவரை 21ம் நூற்றாண்டின் முதல் இருபது ஆண்டுகள் வரப்பிரசாதமாக இருந்துள்ளன.

மிக மோசமான சூழலியல் அழிவின் அறிகுறிகள் தெரியத் துவங்கியிருக்கும் இவ்வேளையில், வருங்கால சந்ததியினருக்காக நம் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு முயற்சிகள் எடுப்பதில் நாம் கவனம் செலுத்தியிருக்க வேண்டிய சமயத்தில், இந்த வைரஸ் பெருந்தொற்று நம் அனைவரையும் தடுமாற வைத்திருக்கிறது.எனினும், இந்தப் பெருந்தொற்று நம்மை பெரும் அவதிக்கு ஆளாக்கினாலும், இது நாம் கையாளக்கூடிய பிரச்சனையாகத்தான் இருக்கிறது. குடிமக்கள் விழிப்புணர்வாகவும் பொறுப்பாகவும் செயல்பட்டால், இதை நம்மால் நிறுத்தமுடியும்.

எதிர்செயல் செய்யாமல் விழிப்புணர்வாக பதில் செயல் செய்யும் மனித ஆற்றலில்தான் தீர்வு இருக்கிறது, இந்தப் பெருந்தொற்றைத் தாண்டி வருவதற்கு மட்டுமல்ல, அதிக நாகரிகமும் நிலைத்தன்மையும் மிகுந்த உலகிற்கான புதிய சாத்தியங்கள் உருவாக்குவதற்கும் இதுதான் தீர்வு. சாத்தியங்களுக்கும் நிஜத்திற்கும் இடையே கடக்கவேண்டிய தூரம் நிச்சயம் இருக்கத்தான் செய்கிறது.

வரும் வருடத்தில், நம்மை நாமே மேலான மனிதர்களாக்கிக்கொண்டு, அதன்மூலம் இன்னும் மேன்மையான உலகை உருவாக்குவதற்கான துணிவும், உறுதியும், விழிப்புணர்வும் நம் அனைவருக்கும் இருக்கவேண்டும். முன்நோக்கிச் செல்ல வேதனைப்படுவது வழியல்ல, அனைத்து உயிர்களுக்கும் அர்த்தமுள்ளதாக இருக்கக்கூடியதை உருவாக்குவதற்கு, நம்மை அர்ப்பணிப்பதுதான் வழி..மிகுந்த அன்பும் ஆசிகளும் என சத்குரு கூறியுள்ளார்.