ஒடிசா ரயில் விபத்து… மீட்புப்பணிகளுக்கு விரையும் இந்திய ராணுவம்.!

ஒடிசாவில் நேற்று நடந்த கோர ரயில் விபத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கு இந்திய ராணுவம் வரவழைக்கப்பட உள்ளது.
ஒடிசாவில் நேற்று இரவு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஹவுரா ரயில் மற்றும் சரக்கு ரயில் ஆகிய 3 ரயில்களும் ஒன்றின் மீது ஒன்று மோதி பெரும் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி இதுவரை 238 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 900-க்கும் அதிகமானோர் பலத்த காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கு தற்போது இந்திய ராணுவம் வரவழைக்கப்பட உள்ளது. காயமடைந்தவர்களை மீட்பதற்கும் அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி, மற்றும் ஆம்புலன்ஸ் சேவை போன்ற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் ராணுவமும் கூடிய விரைவில் சீக்கிரமாக பல்வேறு தளங்களிலும் இருந்து அனுப்பப்பட்டுள்ளன என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுவரை 650க்கும் மேற்பட்டோர் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. விபத்து நடந்த இடத்திற்கு விரைந்த ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறும்போது, விபத்து குறித்த உயர்மட்ட விசாரணை நடத்தப்படும் என்றும் தற்போது முழு கவனமும் மீட்புப்பணிகளில் மட்டுமே இருக்கும் என்றும் அவர் கூறினார்.