கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறிய ராம்தேவ் மீது கிரிமினல் நடவடிக்கை கோரி பீகாரில் வழக்கு பதியப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பதஞ்சலி நிறுவனம் அண்மையில் ‘கொரோனில்’ மற்றும் ‘சுவாசரி’ என்னும் இரு மருந்துகளை வெளியிட்டு, கொரோனா நோய்த் தொற்றுக்கான ஆயுர்வேத மருந்து என தெரிவித்தது.கொரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து 100 சதவிகிதம் குணமடைய வைக்கும் ஆயுர்வேத மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக கூறியது பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம்.மேலும் இதுகுறித்து உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் செய்தியாளர்களைச் சந்தித்த பதஞ்சலி நிறுவனரான பாபா ராம்தேவ் கூறுகையில்:
கொரோனா வைரஸ் நோய்த் தொற்று மருந்துக்காகவும், தடுப்பூசிக்காகவும் ஒட்டு மொத்த உலகமே காத்து இருக்கிறது. இந்தத் தருணத்தில் பதஞ்சலி ஆய்வக மையம் மற்றும் தேசிய மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகமும் இணைந்து ஒரு கூட்டு முயற்சியாக மருத்துவ ரீதியிலான சோதனை அடிப்படையிலும், ஆய்வுகள் அடிப்படையிலும் தயாரிக்கப்பட்ட முதல் ஆயுர்வேத மருந்தை அறிவிப்பதில் மிகவும் பெருமை கொள்கிறோம் என்று தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் இவருடைய இக்கண்டுப்பிடிப்பு செய்தியானது மின்னல் வேகத்தில் பரவவே முந்திக்கொண்டு முன்வந்த ஆயுஷ் அமைச்சகம் கூறியதாவது: கொரோனா தொற்றுக்கு சிகிச்சையளிக்கக்கூடிய பதஞ்சலி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஆயுர்வேத மருந்து குறித்த ஊடக செய்தியானது தங்களின் கவனத்திற்கு வந்ததாகவும், மருந்து குறித்த விவரங்களை சம்பந்தப்பட்ட அந்த நிறுவனத்திடம் கோரப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சகம் அதுவரை இந்த மருந்து குறித்த விளம்பரத்தை நிறுத்துமாறு கேட்டுக் கொள்வதாக ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
திடீரென்று உத்தரவு அமைச்சகத்திடம் வந்ததை அடுத்து மூச்சி இரைக்க ட்விட்டருக்கு ஓடி வந்த அதன் தலைமை செயல் அதிகாரியான ஆச்சார்ய பாலகிருஷ்ணா எங்கள் மருந்து தொடர்பான அனைத்து தகவல்களையும் ஆயுஷ் அமைச்சகத்துக்கு அளித்துள்ளதாகவும், தகவல் தொடர்பு இடைவெளி தற்போது நிரப்பப்பட்டுள்ளதாகவும், ஆயுர்வேத மருத்துவத்துக்கு ஊக்கத்தையும் பெருமையையும் இந்த அரசு வழங்கியுள்ளது என்றும் டுவிட்டரில் தெரிவித்தார்.
இதற்கிடையில் இவர் இவ்வாறு தெரிவிக்க இதுகுறித்து ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலோ பதஞ்சலி நிறுவனத்தால் கூறப்பட்ட மருத்துவ ஆய்வுகள் குறித்த தகவல்கள் பற்றி அமைச்சகத்திற்கு எதுவும் தெரியவில்லை என்று கூறி மேலும் நழுவியது.மேலும் கொரோனாவை குணப்படுத்தும் எனக் கோரப்பட்ட மருந்தின் பெயர், கலவை, இந்த ஆய்வு நடத்தப்பட்ட இடங்கள், மருத்துவமனைகள், எத்தனை பேரிடம் பரிசோதிக்கப்பட்டன என்ற விவரங்கள், நிறுவன நெறிமுறை குழு அனுமதி, இந்திய மருத்துவ பரிசோதனைகள் பதிவின் அனுமதி, ஆய்வின் முடிவுகள் ஆகியவற்றை பதஞ்சலி நிறுவனம் உடனடியாக அதனை தெரிவிக்க வேண்டும் என்று ராம்தேவ் நிறுவனத்திற்கு ஆயுஷ் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் இது குறித்து மத்திய அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் கூறுகையில் மருந்தை வழங்கியிருப்பது ஒரு “நல்ல விஷயம்” ஆனால் அதற்கு அவரது ஆயுஷ் அமைச்சகத்தின் சரியான அனுமதி தேவை என்று கூறினார்.இந்நிலையில் தான் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறிய ராம்தேவ் மீது கிரிமினல் நடவடிக்கை கோரி பீகாரில் வழக்கு பதியப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.