டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தால் ரூ.27,000 கோடி இழப்பு – அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு

According to the All India Chamber of Commerce and Industry, the farmers' strike in Delhi has cost about Rs 27,000 crore.

டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தால், சுமார் ரூ.27 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி மற்றும் அதன் அண்டை மாநிலங்களான உத்திரபிரதேசம், ஹரியானா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் உள்ள விவசாயிகள்  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகள் ஒரு மாதத்திற்கு மேலாக இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பலமுறை பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும் இதற்கு ஒரு முடிவு எட்டப்படவில்லை.

இந்நிலையில் இந்த விவசாயிகளின் போராட்டத்திற்கு பல கட்சித் தலைவர்கள், பிரபலங்கள், பொதுமக்கள், மாணவர்கள் என பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இதுகுறித்து அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு கூறுகையில், டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தால், சுமார் ரூ.27 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, தேசிய தலைவர் பார்டியா மற்றும் தேசிய பொதுச்செயலாளர் பிரவீன் கண்டேல்வால் ஆகியோர் கூறுகையில், பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் இருந்து டெல்லிக்கு வரும் பொருட்கள் வராததால், மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது இமாச்சலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், மத்திய பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா மற்றும் நாட்டின் பிற மாநிலங்களில் இருந்து டெல்லிக்கு பொருட்கள் வருவதும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும் சுமார் 50 ஆயிரம் லாரிகள் வெவ்வேறு மாநிலங்களில் இருந்து பொருட்களை ஏற்றிக்கொண்டு டெல்லிக்கு வருவதாகவும், சுமார் 30 ஆயிரம் லாரிகள் தலை நகருக்கு வெளியே பொருட்களை கொண்டு செல்வதாகவும் இவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த போராட்டம் காரணமாக முழு நாட்டிற்கும் பொருட்கள் வழங்குவது பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளனர்.