பாகிஸ்தான் ஏஜென்ட்டிற்கு ரகசிய தகவல்.. வெளியுறவு அமைச்சக ஊழியர் அதிரடி கைது!

பாகிஸ்தான் ஏஜென்ட்டிற்கு ரகசிய தகவல்களை பரிமாறிய வெளியுறவு அமைச்சக ஊழியர் கைது.

MEA employee arrested

பாகிஸ்தான் ஏஜென்ட்டிற்கு ரகசிய தகவல்களை பரிமாறிய வெளியுறவு அமைச்சக ஊழியர் கைது.

பாகிஸ்தான் பெண் ஏஜென்ட் ஒருவருக்கு வெளியுறவு அமைச்சகத்தின் முக்கிய தகவல்கள், கோப்புகள் உள்ளிட்ட ரகசிய தகவலை கொடுத்ததாக எழுந்த புகாரில் வெளியுறவு அமைச்சக ஊழியர் பிரவீன் பால் என்பர் கைது செய்யப்பட்டார். உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில், வெளியுறவு அமைச்சகத்தில் பணிபுரியும் நபரை காசியாபாத் போலீசார் கைது செய்துள்ளனர்.

பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள ஒருவருக்கு, வெளியுறவு அமைச்சக ஆவணங்கள் மற்றும் ஜி20 கூட்டம் தொடர்பான ரகசிய தகவல்களை நவீன் பால் தெரிவித்ததாக, அவர் மீதான எஃப்ஐஆர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. விசாரணையில் நவீன் பால் சமூக வலைதளங்கள் மூலம் ஒரு பெண்ணுடன் தொடர்பு கொண்டது தெரியவந்தது.  முக்கிய ஆவணங்களை தனது அலைபேசியில் படம் பிடித்து அனுப்பியதுடன், அவ்வபோது இருவரும் வீடியோ சாட்டிங் செய்ததும் விசாரணையில் அம்பலமானது.

முதலில் அந்த பெண்ணின் எண் உத்தரபிரதேச மாநிலம் பரேலியை சேர்ந்தது என கண்டறியப்பட்டது. இருப்பினும், அந்த எண்ணின் ஐபி முகவரியைக் கண்டுபிடித்த பிறகு, அது கராச்சியில் இருந்து வந்தது என கண்டறியப்பட்டுள்ளது. நவீனின் மொபைல் போனில் இருந்து வெளியுறவு அமைச்சகம் மற்றும் ஜி20 தொடர்பான பல ஆவணங்களையும் போலீசார் கண்டுபிடித்தனர்.

அந்த கோப்புகள் ரகசியம் என்ற பெயரில் சேமிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். ராஜஸ்தானின் ஆல்வாரைச் சேர்ந்த ஒரு பெண்ணையும் தேடி வருவதாகவும், அவர் நவீனின் கணக்கிற்கு டிஜிட்டல் முறையில் சில தொகையை மாற்றியதாகவும் போலீசார் தெரிவித்தனர். மேலும், ‘அஞ்சலி கொல்கத்தா’ என சேமித்திருந்த தொடர்பு எண்ணை பயன்படுத்தி நவீன் இந்த புகைப்படங்களை வாட்ஸ்அப் மூலம் அனுப்பியுள்ளார். ஏறக்குறைய 2 மாதங்களாக அந்த பெண்ணுடன் நவீன் தொடர்பில் இருந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவரது வங்கி கணக்கில் சுமார் 85 ஆயிரம் ரூபாய் பணம் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அஞ்சலி என்று அழைக்கப்படும் நபர் உண்மையில் கொல்கத்தாவைச் சேர்ந்தவர் அல்ல, ஆனால் பாகிஸ்தான் அல்லது ஐஎஸ்ஐயுடன் தொடர்புடையவராக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். பாகிஸ்தான் உளவாளியிடம் ரகசிய விவரங்களைப் பகிர்ந்து கொண்டதற்காக இந்தியாவின் டிஆர்டிஓ விஞ்ஞானி பிரதீப் குருல்கர் கைது செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, மேலும், வெளியுறவு அமைச்சக ஊழியர் ஒருவர் காசியாபாத் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.