பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் தொடர்புடைய 2 பேர் துப்பாக்கிசூட்டில் சுட்டுக்கொலை.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் பாடகர் சித்து மூஸ்வாலா கொலையில் தொடர்புடைய இரண்டு பேர் அம்மாநில போலீசால் சுட்டு கொல்லப்பட்டனர். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல பாடகர் சித்து மூஸ்வாலா கடந்த மே மாதம் 29-ம் தேதி மன்சா மாவட்டத்தில் உள்ள மூஸா என்ற கிராமத்தில் பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பஞ்சாப் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பஞ்சாப் அரசு வி.ஐ.பி-க்களுக்கு கொடுத்து வந்த பாதுகாப்பை விலக்கிக் கொண்ட பிறகுதான் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
பஞ்சாப் பாடகர் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், பாடகர் சித்து மூஸ்வாலா கொலையில் நேரடியாக ஈடுபட்டதாகக் கூறப்படும் இரண்டு குண்டர்கள் ஜக்ரூப் சிங் ரூபா மற்றும் மன்பிரீத் சிங் என்ற மன்னு குஷா ஆகியோர் அமிர்தசரஸ் அருகே அட்டாரி எல்லையிலிருக்கும் பக்னா என்ற கிராமத்தில் பதுங்கியிருப்பதாக பஞ்சாப் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்த தகவலை தொடர்ந்து உடனடியாக தனிப்படை போலீஸார் அந்தக் கிராமத்தை முற்றுகையிட்டு சுற்றி வளைத்தனர். இதனைத்தொடர்ந்து அவர்கள் பதுங்கியிருக்கும் இடத்தில் போலீஸார் அதிரடி ரெய்டு நடத்தினர்.
அப்போது, இருதரப்பினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சூடு நடந்தது. நீண்ட நேரம் நடந்த துப்பாக்கிச் சண்டையில், பாடகர் சித்து மூஸ்வாலா கொலையில் முக்கிய சந்தேக நபர்களான ஜக்ரூப் சிங் ரூபா மற்றும் மன்பிரீத் சிங் என்ற மன்னு குஷா என்ற இரண்டு குண்டர்கள் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர். பாடகர் கொலையில் தொடர்புடைய மேலும் 3 பேர் தலைமறைவாக இருக்கின்றனர். அவர்களை போலீஸார் தொடர்ந்து தேடி வருகிறனர்.
இது தவிர கொலை தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இருதரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் போலீஸார் தரப்பில் மூன்று பேர் காயமடைந்தனர். இரண்டு குண்டர்கள் – ஜக்ரூப் சிங் ரூபா மற்றும் மன்பிரீத் சிங், பாடகரின் கொலையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது, மேலும் அவர்கள் குற்றம் நடந்ததிலிருந்து தலைமறைவாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த ஆபரேஷன் நடந்தபோது முழுப் பகுதியும் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. உள்ளூர் மக்களை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு கூறப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து, பஞ்சாப் டிஜிபி கவுரவ் யாதவ் கூறுகையில், இன்று நடந்த கடும் துப்பாக்கிச் சண்டையில் சித்து மூஸ் வாலா வழக்கில் தொடர்புடைய ஜக்ரூப் சிங் ரூபா மற்றும் மன்பிரீத் சிங் ஆகிய 2 குண்டர்கள் கொல்லப்பட்டனர். ஒரு AK47 மற்றும் ஒரு கைத்துப்பாக்கியை மீட்டுள்ளோம். 3 போலீஸ் அதிகாரிகளுக்கும் லேசான காயமடைந்தனர் என தெரிவித்தார். சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை நாங்கள் கண்காணித்து வருகிறோம் என்றும் எங்கள் குழு இந்த பகுதியில் சில நடமாட்டத்தைக் கண்டது. நாங்கள் அதைச் செயல்படுத்தினோம் எனவும் கூறினார்.