18 வயதிற்கு மேற்பட்டோர் இன்று முதல் தடுப்பூசி...! சில மாநிலங்களில் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கவில்லை...!

The vaccination drive has not started due to insufficient stock of vaccine in states including Tamil Nadu, Karnataka and Mumbai.

தமிழகம், கர்நாடகம், மும்பை உள்ளிட்ட மாநிலங்களில் போதுமான அளவு தடுப்பூசி கையிருப்பு இல்லாத காரணத்தினால் இந்த தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கவில்லை.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வரும் நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அரசு மக்களை தடுப்பூசி போடுமாறு அறிவுறுத்தி வருகிறது.

18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி

இளம் வயதினரை கொரோனா வைரசின் இரண்டாவது அலை அதிகமாகத் தாக்குவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 18 வயதான அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு தகுதியானவர்கள் என்று மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையில், மே 1ஆம் தேதி முதல் மூன்றாவது கட்டமாக 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால்,  நேரடியாக தடுப்புசி மையங்களுக்கு செல்ல அனுமதி கொடுக்கவில்லை.

தடுப்பூசிக்கு முன்பதிவு

நேரடியாக தடுப்பூசி மையத்திற்கு சென்று தடுப்பூசி போட அனுமதி வழங்கப்படாத நிலையில், தடுப்பூசி போட்டுக்கொள்ள ஏப்ரல் 28-ஆம் தேதி முதல் கோவின் தளம் அல்லது ஆரோக்கிய சேது செயலியில் முன் பதிவு செய்யுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நாடு முழுவதும், நேற்று காலை வரையில் 2.45 கோடி பேர் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு பதிவு செய்துள்ளனர்.

தடுப்பூசி போடுவதில் சிக்கல்

இந்நிலையில் இன்று நாடு முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதில் சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தமிழகம், கர்நாடகம், மும்பை உள்ளிட்ட மாநிலங்களில் போதுமான அளவு தடுப்பூசி கையிருப்பு இல்லாத காரணத்தினால் இந்த தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கவில்லை என கூறப்படுகிறது.