கர்ப்பிணி மனைவியை ஜார்க்கண்டில் இருந்து மத்தியப்பிரதேசம் வரை 1,200 கிமீ தூரத்திற்கு ஸ்கூட்டரில் அமர்த்தி தேர்வெழுத கணவர் அழைத்து சென்றுள்ளார்.
ஜார்க்கண்டில் கோடா மாவட்டத்தில் உள்ள காந்தா டோலா கிராமத்தை சேர்ந்த பழங்குடி தம்பதிகள் தனஞ்சய் குமார் (27) மற்றும் அவரது கர்ப்பிணி மனைவி சோனி ஹெம்ப்ராம் (22). தற்போது ஊரடங்கு காரணமாக ரயில்கள் மற்றும் பேருந்துகள் இயக்கப்படாத நிலையில் மத்திய பிரதேசத்தின் குவாலியரில் உள்ள தேர்வு மையத்தில் நடக்கும் ஆசிரியர் தேர்வான DEd(Diploma in Education)க்கு சோனியால் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
தனது மனைவியை ஆசிரியராக காண விரும்பிய தனஞ்சய் மனைவியை ஸ்கூட்டரில் அமர்த்தி மழை மற்றும் மோசமான சாலைகள் வழியாக 1,200 கி.மீ.க்கும் மேல் பயணம் செய்து மனைவியை தேர்வு எழுத வைத்துள்ளார். இதுகுறித்து பிரபல நாளிதழ் ஒன்றிற்கு தனஞ்சய் அளித்த பேட்டியில் கூறியதாவது, ரயில்களும், பேருந்துகளும் ஓடாததால் ஸ்கூட்டரில் பயணம் செய்த முடிவு செய்தோம். ஆரம்பத்தில் மனைவி எதிர்த்தாள், அதன்பின் ஒப்புக் கொண்டார். ஸ்கூட்டருக்கு பதிலாக டாக்ஸியை பிடித்திருந்தால் வாடகையாக ரூ. 33,000 செலவாகும். எனக்கு அது பெரிய தொகை என்று கூறினார். மேலும் எங்களிடம் இருந்த நகைகளை அடகு வைத்த திரட்டிய ரூ. 10,000-ல் ரூ. 5,000 இங்கும் தங்கும் அறைக்கு வாடகையாக கொடுத்ததாகவும் கூறியுள்ளார். சமையல்காரராக பணியாற்றி வந்த தனஞ்சய் ஊரடங்கு காரணமாக தனது வேலையை இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து அறிந்த குவாலியர் கலெக்டரான கௌஸ்லேந்திர விக்ரம், மாவட்ட மகளிர் அதிகாரியான ஷலீன் சர்மாவுக்கு இந்த கணவன் மனைவியை கவனித்து கொள்ளும் படி உத்தரவிட்டதுடன், 5,000 ரூபாயையும் தொகையை வழங்கியுள்ளார். மேலும் தம்பதியினர் தங்கும் அறைக்கு வாடகை பணம் செலுத்துவதாகவும், உணவு ஏற்பாடுகள், கர்ப்பிணியான மனைவிக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சை மற்றும் அவர்கள் தங்கள் கிராமத்திற்கு திரும்பி செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நிர்வாகம் ஏற்றுக் கொள்வதாக கூறியுள்ளார்.