புதுச்சேரியில் பாஜக அலுவலகம் சூறை!அமைச்சர் பதவி பங்கீட்டில் குழப்பம்..!

The Pondicherry BJP office was besieged and looted by more than 100 supporters of MLA Jankumar

புதுச்சேரி பாஜக அலுவலகத்தை எம்.எல்.ஏ.ஜான்குமாரின் ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு சூறையாடினர்.

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வென்று ஆட்சியை கைப்பற்றியது.முன்னதாக என்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ஜான்குமார்,பாஜக சார்பில் காமராஜ் நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இதற்கிடையில்,நீண்ட இழுபறிக்கு பின்னர் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணிப் பேச்சுவார்த்தையில் பாஜகவுக்கு சபாநாயகர் பதவி, 2 அமைச்சர்கள் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதனையடுத்து,புதுச்சேரி சபாநாயகராக ஏம்பலம் செல்வம் பதவியேற்றுக்கொண்டார்.ஆனால்,அமைச்சர்கள் பதவியேற்பு நடைபெறவில்லை.மேலும்,பாஜகவின் முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், ஜான்குமார் ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில்,அமைச்சர் பதவிக்கான பெயர்பட்டியலில் எம்.எல்.ஏ. ஜான்குமாரின் பெயர் இடம்பெறவில்லை.இதனால்,எம்.எல்.ஏ. ஜான்குமாரின் ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று புதுச்சேரி சித்தானந்தா நகர் பகுதியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.அப்போது எம்.எல்.ஏ. ஜான்குமார் அவர்களுக்கு,அமைச்சர் பதவி வழங்க வேண்டுமென வலியுறுத்தி கோஷமிட்டனர்.

மேலும்,பாஜக அலுவலகத்தை சூறையாடி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.இதனையடுத்து,அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் அங்கு வந்த கட்சி நிர்வாகிகளும், காவல்துறையினரும்,”இது தொடர்பாக மேலிடத்துக்குத் தெரிவிக்கப்படும் எனக் கூறி போராட்டத்தைக் கட்டுப்படுத்தினர்.இதனால் புதுச்சேரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அதுமட்டுமல்லாமல்,தனக்கு குறைந்தது 6 மாத காலமாவது அமைச்சர் பதவி வேண்டும் என்று ஜான்குமார் பிடிவாதமாக உள்ளார்.இதனால்,அமைச்சர் பதவி பங்கீட்டில் பாஜகவினரிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.