டெல்லியில் உபர் டாக்சியின் ஓட்டுநர் பிரியங்காவை தாக்கி பணத்தை பறித்த கொள்ளையர்கள்.
டெல்லியில் உபர் டாக்சியின் ஓட்டுநராக இருப்பவர் பிரியங்கா என்ற பெண். அப்பெண் சமயபூர் பகுதியில் வசித்து வருகிறார். இவர் நேற்று இரவு வாடிக்கையாளர்கள் தன்னை அழைத்ததால் காரை எடுத்துக் கொண்டு புறப்பட்டார்.
வெளிமாநில பேருந்துகளை நிறுத்தும் டெர்மினஸ் இருக்கும் காஷ்மிரா கேட் நோக்கி சென்றுள்ளார். இரவில் கடுமையான பனிமூட்டம் காணப்பட்டதால் பிரியங்கா காரை மெதுவாக ஓட்டி சென்றுள்ளார்.
கார் வாடிக்கையாளர் அருகில் சென்ற போது காரின் முன் பக்கமாக வந்து இரண்டு பேர் காரை நோக்கி கற்களை வீசி உள்ளனர். அந்த கல் காரின் கண்ணாடியை உடைத்ததோடு பிரியங்காவின் தலையில்பட்டது. மேலும் உடைந்த கண்ணாடி துண்டுகள் அவரது உடலையும் தாக்கியுள்ளது.
இதனை அடுத்து பிரியங்கா என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்காக வெளியில் இறங்கி வந்துள்ளார். அப்போது கற்களை வீசியவர்கள் அவரது போனை பிடுங்க முயன்றுள்ளனர். ஆனால் அந்த போனை அவர் போராடி காப்பாற்றிக் கொண்டார். மேலும் அவரிடம் இருந்து பணத்தை பறித்துக் கொண்டனர்.
இது குறித்து பிரியங்கா கூறுகையில், என்னை தாக்கிய இரண்டு பேரும் காரின் சாவியை பிடுங்க முயன்றனர். ஆனால் கார் என்னுடையது கிடையாது என்று அவர்களிடம் தெரிவித்தேன். அதோடு உதவிக்காக கத்தினேன். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் இரண்டு பேரும் பீர்பாட்டிலால் என்னை கழுத்து மற்றும் நெஞ்சு பகுதியில் தாக்கினர்.
கழுத்தில் இருந்து ரத்தம் வந்ததால் ரத்தம் வராமல் தடுப்பதற்காக துணியால் கழுத்தை மறைத்துக் கொண்டு உபர் அவசர எண்ணை தொடர்பு கொண்டேன். அந்த வழியாக சென்ற வாகனத்தை நிறுத்தி உதவி கேட்க முயற்சித்தேன். ஆனால் எனக்கு யாரும் உதவ முயற்சிக்கவில்லை.
30 நிமிடங்களுக்கு பின் காவல்துறையினர் அந்த இடத்திற்கு வந்து என்னை மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் எனக்கு பத்து தையல் போடப்பட்டது. அந்த நேரத்தில் நாம் சுயநினைவு இல்லாத காரணத்தால் நான் குற்றவாளிகள் மீது புகார் அளிக்கவில்லை என தெரிவித்தார்.
பிரியங்கா புகார் அளிக்கவில்லை என்றாலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, போலீசார் தாக்கிய குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.