ராகுல் காந்தியின் ட்விட்டர் பதிவு ஒன்றை நீக்கியது ட்விட்டர் நிறுவனம்...!

Twitter has deleted a Twitter post by Rahul Gandhi as pokso was against the law.

போக்சோ சட்டத்திற்கு எதிராக இருந்ததால் ராகுல் காந்தியின் ட்விட்டர் பதிவு ஒன்றை ட்விட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது.

டெல்லியில் உள்ள கண்டோன்மென்ட் பகுதியில் கடந்த ஒன்றாம் தேதி தலித் சிறுமி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். மேலும், சிறுமியின் உடல் வலுக்கட்டாயமாக தகனம் செய்யப்பட்டுள்ளது. எனவே, சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதன் காரணமாக மயானத்தின் பூசாரி மற்றும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரை கடந்த சில தினங்களுக்கு முன்னதாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள் நேரில் சென்று சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் கூறி இருந்தார். அதன் பின் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இந்த புகைப்படம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது என சர்ச்சை எழுந்தது.

எனவே, இது தொடர்பாக ட்விட்டர் நிறுவனத்திற்கு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு தேசிய ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. அதில் சட்டத்தை மீறி பெற்றோரின் புகைப்படத்தை பதிவு செய்ததன் மூலம் சிறுமியின் அடையாளம் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ராகுல்காந்தி இந்த பதிவை உடனடியாக நீக்க ட்விட்டர் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்ப புகைப்படத்தை பகிர்ந்தது தொடர்பாக ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு செய்யக் கோரி டெல்லியை சேர்ந்த வழக்கறிஞர் வினித் ஜிண்டால் என்பவரும் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் விமர்சனத்துக்கும், சர்ச்சைக்கும் உள்ளாகிய ராகுல் காந்தியின் இந்த ட்விட்டர் பதிவு தற்பொழுது ட்விட்டர் நிறுவனத்தால் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.