இந்திய எல்லைக்குள் நுழைந்த இரு பாகிஸ்தான் சிறுமிகள்!

Two Pakistani girls who entered the Indian border have been found by security forces and are being repatriated safely.

இந்திய எல்லைக்குள் நுழைந்த இரண்டு பாகிஸ்தானை சேர்ந்த சிறுமிகள் பாதுகாப்பு படையினரால் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களது நாட்டிற்கு பத்திரமாக திருப்பி அனுப்புவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லைப் பகுதியில் இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் வழக்கம்போல பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்துள்ளனர். அப்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை சேர்ந்த இரண்டு பாகிஸ்தான் சிறுமிகள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைவதை கண்டுள்ளனர். இதனையடுத்து எச்சரிக்கையுடன் செயல்பட்ட பாதுகாப்பு படையினர் அந்த சிறுமிகள் மீது தாக்குதல் நடத்தாமல் அவர்கள் இருவரையும் பிடித்து விசாரித்துள்ளனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள அப்பாஸ்பூர் கிராமத்தை சேர்ந்த 17 வயதுடைய லைபா ஷபீர் மற்றும் 13 வயதுடைய சானா ஷபீர் எனும் சிறுமிகள் என்பது தெரியவந்துள்ளது. மேலும், இவர்கள் தவறுதலாக இந்திய எல்லைக்குள் நுழைந்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய வசதிகளை கொடுத்த இந்திய பாதுகாப்பு படையினர் சிறுமிகளை பாகிஸ்தான் தரப்பினரிடம் ஒப்படைக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.