டெல்லி :கடந்த ஒலிம்பிக் தொடரில் மல்யுத்த போட்டியில் இறுதி போட்டி வரை சென்று 100 கிராம் எடை கூடியதால் பதக்கத்தை இழந்தார் வினேஷ் போகத். பதக்கத்தை இழந்தாலும், இந்திய மக்கள் மத்தியில் பதக்கம் வென்ற வீராங்கனைக்கான வரவேற்ப்பை அவர் பெற்றார்.
பதக்கத்தை இழந்த வினேஷ் போகத், தன்னால் இதற்கு மேல் போராட வலிமையில்லை எனக் கூறி மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன்பிறகு, வினேஷ் மற்றும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஆகிய இருவரும் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளனர் என்று கூறப்பட்டது. அதற்கு ஏற்றார் போல அண்மையில் அவர்கள் காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தனர்.
இன்று அவர் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக கூறப்படும் நிலையில், அதனை உறுதிப்படுத்தும் விதமாக, தான் வகித்து அந்த ரயில்வேத்துறை பணியை தற்போது ராஜினாமா செய்துள்ளார் வினேஷ் போகத். இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் வினேஷ் ஓர் கடிதத்தை பகிர்ந்துள்ளார்.
மேலும், ” இந்திய இரயில்வேயில் சேவையாற்றியது என் வாழ்வில் மறக்கமுடியாத மற்றும் பெருமையான காலமாகும். எனது வாழ்க்கையின் இந்த கட்டத்தில், ரயில்வே சேவையில் இருந்து என்னைப் பிரித்துக் கொள்ள முடிவு செய்து, எனது ராஜினாமாவை இந்திய ரயில்வேத்துறை அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளேன். தேச சேவையில் ரயில்வே எனக்கு வழங்கிய இந்த வாய்ப்பிற்காக இந்திய ரயில்வேவுக்கு நான் எப்போதும் நன்றியுள்ளவளாக இருப்பேன்.” என்றும் வினேஷ் போகத் பதிவிட்டுள்ளார்.
unknown node