மனசாட்சியுடன் வாக்களியுங்கள்! பாஜகவுக்கு எதிராக கர்நாடக ஒப்பந்ததாரர்கள் அறிக்கை!

கர்நாடகா தேர்தலை முன்னிட்டு, பாஜகவுக்கு எதிராக கர்நாடக ஒப்பந்ததாரர்கள் சங்கம் பரபரப்பு அறிக்கை.
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் மே 10-ஆம் தேதி நாளை ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், நேற்று மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது. பாஜக, காங்கிரஸ், ஜனதா தளம் போட்டியிடும் இத்தேர்தலில், பகுஜன் சமாஜ், சிபிஐ, சிபிஎம், இந்திய குடியரசுக் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.
இதில், பாஜகவில் 224 வேட்பாளர்களும், காங்கிரசில் 223, மதசார்பற்ற ஜனதா தளத்தில் 207, ஆம் ஆத்மியில் 217 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். கர்நாடக தேர்தலில் மீண்டும் ஆட்சியை தக்க வைக்க பாஜக தீவிரம் காட்டி வரும் நிலையில், இழந்த ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் மும்மரம் காட்டுகிறது. ஒருபக்கம், கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாகவும், மறுபக்கம் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் எனவும் கருத்து கணிப்பில் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தில் (பாஜக) அரசு ஒவ்வொரு ஒப்பந்தத்தையும் வழங்க 40% கமிஷன் கேட்பதாக கர்நாடக ஒப்பந்ததாரர்கள் சங்கம் கடிதத்தால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், பாஜக ஆட்சியில் ஊழல் மலிந்துவிட்டது, பாஜக ஆட்சியில் அரசு ஒப்பந்தங்களுக்கு பெறப்பட்ட 40% கமிஷனால் பல உயிர்கள் பறிபோய்விட்டன.
கர்நாடகத்தில் மக்கள் உயிருக்கு ஆபத்தான கட்டமைப்புகளில் வாழவேண்டிய ஏற்பட்டுள்ளது. மக்கள் மனசாட்சிப்படி வாக்களித்தால் மட்டுமே ஜனநாயகம் மலரும். கர்நாடகத்தில் பெருகிவிட்ட ஊழல் அனைவரது மனசாட்சியையும் காயப்படுத்தி இருப்பதாகவும் ஒப்பந்ததாரர்கள் சங்கம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.