தமிழ்நாட்டை சேர்ந்த 190 பேர் விபத்து நடந்த ரயிலில் பயணம் – சுகாதாரத்துறை செயலாளர் தகவல்!

தேவைப்பட்டால் மருத்துவ உதவிகளை மேற்கொள்ள தமிழ்நாடு மருத்துவர்கள் ஒடிசா செல்ல தயார் என ககன்தீப் சிங் பேடி பேட்டி.
சென்னை சென்டரல் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்தில் தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு மேற்கொண்டார். இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், ஒடிசாவில் விபத்து நடந்த ரயிலில் தமிழ்நாட்டை சேர்ந்த 190 பேர் பயணித்ததாக தகவல் கிடைத்துள்ளது. விபத்து நடந்த ரயிலில் பயணித்த 190 பேரும் தமிழ்நாட்டுக்கு அழைத்து வரப்பட உள்ளனர்.
190 பேருக்கும் சிறிய காயங்களே ஏற்பட்டுள்ளதால் தேவையான மருத்துவ உதவிகள் வழங்கப்படும். ஒடிசா மருத்துவமனை மருத்துவர் குழுவிடம் தொடர்பில் உள்ளோம். தேவைப்பட்டால் மருத்துவ உதவிகளை மேற்கொள்ள தமிழ்நாடு மருத்துவர்கள் ஒடிசா செல்ல தயாராக உள்ளனர். அதன்படி, ஒடிசா மொழி தெரிந்த மருத்துவர்கள் ஒடிசா செல்ல தயாராக உள்ளனர் எனவும் தெரிவித்தார்.
மேலும், ஒடிசா ரயில் விபத்தில் இருந்து சிறு காயங்களுடன் தப்பித்த 3 பயணிகள் வந்தடைந்தாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, புவனேஷ்வர் விமான நிலையத்தில் இருந்து ராஜலட்சுமி, ரமேஷ், நாகேந்திரன் ஆகியோர் சென்னை வந்தடைந்தனர். இதனிடையே, தமிழகத்தை சேர்ந்த 35 பேர் ரயில் விபத்தில் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியிருந்தது. முதற்கட்டமாக 50 பேர் ஒடிசாவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்துள்ளனர் எனவும் தகவல் வெளியாகியிருந்தது. ஆனால், அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரவில்லை.
மேலும், சென்னையில் இருந்து இன்று இரவு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. ரயில் விபத்தில் சிக்கியவர்களின் குடும்பத்தினரை அழைத்து கொண்டு இரவு 7.20 மணிக்கு பத்ராக் புறப்படுகிறது சிறப்பு ரயில். சென்னை சென்ட்ரல் – ஹவுரா (12840) மெயில் இரவு 7.20 மணிக்கு பத்ராக் வரை இயக்கப்படுகிறது. ஒடிசா ரயில் விபத்தில் சிக்கியவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை அழைத்து செல்ல தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. சென்னை சென்ட்ரலில் உள்ள கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு பயணசீட்டை பெற்று கொள்ளலாம்.
வழக்கம்போல் மற்ற பயணிகள் ஏசி மற்றும் ஸ்லீப்பர் வகுப்புகளில் பயணிக்கலாம். ரயிலில் பயணம் செல்பவர்கள் – 004 25330952, 004 25330953, 004 25354771, 9003061974, 044 25354148, 044 25330714 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.