அதிமுக கூட்டணிக்கு எதிராக பேசக்கூடாது – அட்வைஸ் கொடுத்த அமித்ஷா!
அண்ணாமலையுடன் ஆலோசனை நடத்திய அமித்ஷா அதிமுக கூட்டணிக்கு எதிராக பேசக்கூடாது என அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மதுரை : மதுரை வேலம்மாள் திடலில் இன்று (ஜூன் 8, 2025) மாலை 3 மணியளவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் தமிழக பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி உத்திகள் மற்றும் தோழமைக் கட்சிகளுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து முக்கிய ஆலோசனைகள் நடைபெறவுள்ளன. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இன்று மதுரைக்கு அமித்ஷா வருகை தந்தார்.
வருகை தந்தவுடன் நேரடியாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சுவாமி வழிபாடு செய்தார். அதற்கு முன்னதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோரை சந்தித்து பேசினார். முதலில், நயினார் நாகேந்திரன் தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்ற பிறகு, கட்சிப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புகார் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், தமிழகத்தில் பாஜக-வின் வாக்கு வங்கியை விரிவாக்குவதற்கு தீவிரமான முயற்சிகள் தேவை என்று அவர் அறிவுறுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நயினார் நாகேந்திரனை சந்தித்த பிறகு அண்ணாமலையுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். அமித்ஷா, அண்ணாமலையுடன் நடத்திய ஆலோசனையில், அதிமுக கூட்டணிக்கு எதிராக பகிரங்கமாக பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே, “அதிமுக-பாஜக கூட்டணி உறுதியானது மற்றும் இறுதியானது,” என்று முன்னர் நயினார் நாகேந்திரன் தெரிவித்திருந்த நிலையில், அண்ணாமலையின் சில கருத்துகள் கூட்டணி தர்மத்தை மீறுவதாக அரசியல் வட்டாரங்கள் விமர்சனங்கள் எழுந்தது. இதனால், கூட்டணிக்கு எதிராக பேசுவது எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாக அமையும் என்பதால், இத்தகைய பேச்சுகளை தவிர்க்க வேண்டும் என்று அமித்ஷா வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.