செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரி செய்ய ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர்கள் பரிந்துரை.
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை மேற்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். இசிஜியில் மாறுபாடு இருந்ததால், இதய ரத்த நாளத்தில் அடைப்பு இருக்கிறதா என சோதிக்க மருத்துவர்கள் முடிவு செய்து, பரிந்துரைத்தனர்.
அதன்படி, செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை நடைபெற்று வந்தது. இதனால், செந்தில் பாலாஜியை 2 மணி நேரத்துக்கு யாரும் பார்க்க அனுமதியில்லை எனவும் தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோகிராம் பரிசோதனை நிறைவு பெற்றுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மேற்கொள்ளப்பட்ட அஞ்சியோகிராம் பரிசோதனையில் ரத்தக் குழாய்களில் 3 அடைப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. மூன்று முக்கியமான ரத்த குழாய்களில் அடைப்பு இருப்பதை அடுத்து, செந்தில் பாலாஜிக்கு விரைவில் இதய அறுவை (பைபாஸ் சர்ஜரி) சிகிச்சை செய்ய ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
மருத்துவர்கள் பரிந்துரையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. நேற்று நடைபெற்று வந்த சோதனைக்கு பிறகு நள்ளிரவு அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அப்போது, நெஞ்சுவலி ஏற்பட்டது காரணமாக உடனடியாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
unknown nodeSenthil Balaji Medical report [Image Source : Twitter/@Nandhini_Twits]
