சென்னை : 2029-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின்போது நாட்டின் அடுத்த பிரதமர் தேர்வாக மக்கள் யாரை விரும்புகிறார்கள் என்பது குறித்து 'இந்தியா டுடே' மற்றும் 'சி-வோட்டர்ஸ்' அமைப்புகள் இணைந்து சமீபத்தில் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தின.
இந்தத் தேசிய அளவிலான கருத்துக்கணிப்பின் முடிவுகளின்படி, தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி 48.7 சதவீத மக்களின் ஆதரவைப் பெற்று முதலிடத்தில் நீடிக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 27.1 சதவீத ஆதரவுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். இந்த வரிசையில் தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான ஜோசப் விஜய் 9.2 சதவீத ஆதரவை நாடு முழுவதும் பெற்று அதிர்வலைகளை ஏற்படுத்தி, மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் பிரதமர் வேட்பாளர் கருத்துக்கணிப்பில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், இது குறித்துச் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு மக்கள் தற்போது ஒரு மிகப்பெரிய வாய்ப்பைக் கொடுத்திருக்கிறார்கள் என்றும், அந்த வாய்ப்பை அவரும் அவரது கட்சியும் முதலாவதாகச் சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார். பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு இணையாகப் பாரதப் பிரதமர் பதவிக்கு இன்னொருவரை இன்று யாரும் சிந்தித்துக் கூடப் பார்க்க முடியாது என்று தமிழிசை திட்டவட்டமாகக் கூறினார்.
நரேந்திர மோடி அவர்கள் மூன்று முறை தொடர்ந்து நாட்டின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் மட்டுமல்லாமல், அதற்கு முன்பாகப் பன்னிரண்டு ஆண்டுகள் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராகவும் இருந்து, மொத்தம் இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பொது வாழ்க்கையில் நெடுங்கால அரசியல் அனுபவத்தைப் பெற்றவர் என்பதால் அவருக்கு இணையாக யாரையும் பேசக்கூட முடியாது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து பேசிய தமிழிசை, ஜனநாயகத்தில் எல்லோருக்குமே பேசுவதற்கும் நினைப்பதற்கும் உரிமை இருக்கிறது என்றாலும், மோடி அவர்களுக்கு இணையாக நடப்பது கூடச் சாத்தியமில்லை என்றார். பாரதப் பிரதமர் அவர்களுக்குத் தென் மாநிலம், வட மாநிலம் என்ற பாகுபாடு கிடையாது என்றும், சொல்லப்போனால் அவர் தென் மாநிலங்களின் மீது அதிக அக்கறை கொண்டவர் என்றும் கூறினார். தமிழ்நாட்டின் பெருமையான திருக்குறளை உலகளவில் பாரதப் பிரதமர் அளவுக்கு எடுத்து கையாண்டவர்கள் இன்னும் வேறு யாரும் கிடையாது என்றும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
