டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்க! வலியுறுத்திய திருமா..உறுதிகொடுத்த கிஷன் ரெட்டி!

டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதைக் கைவிடக் கோரி, ஒன்றிய சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியிடம் திருமாவளவன் நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளார்.

Kishan Reddy and thirumavalavan

சென்னை :மத்திய அரசு மதுரை மாவட்டம், மேலூர் அருகேயுள்ள நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், இதற்கு தமிழகத்தில் இருந்து பலத்த எதிர்ப்புகள் கிளம்பியது. குறிப்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி என பலரும் எதிர்ப்புகளை தெரிவித்து இருந்தார்கள்.

இதனையடுத்து, நேற்றைய தினம் தமிழக சட்டமன்றத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த சூழலில், டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்யவலியுறுத்தி மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை விசிக தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்துள்ளார்.

சந்திப்பின் போது இந்த திட்டத்தை ரத்து செய்யக்கோரி திருமாவளவன் கொடுத்த கடிதத்தையும் கிஷன் ரெட்டி பெற்றுக்கொண்டு தமிழ்நாடு அரசின் ஒப்புதல் இல்லாமல் இந்திய ஒன்றிய அரசு எதுவும் செய்யப்போவதில்லை என உறுதியளித்திருக்கிறார்.

இந்த தகவலை விசிக தலைவர் திருமாவளவன் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் கூறியதாவது ” இந்திய ஒன்றிய அரசின் சுரங்கத்துறை அமைச்சர் மாண்புமிகு கிஷன் ரெட்டி அவர்களைச் சந்தித்து, மதுரை மாவட்டம், மேலூர் அருகேயுள்ள நாயக்கர்பட்டியில் “டங்க்ஸ்டன் சுரங்கம்” அமைப்பதைக் கைவிடக் கோரி வலியுறுத்தினேன்.

அதனைப் பெற்றுக்கொண்ட அவர், தமிழ்நாடு அரசின் ஒப்புதல் இல்லாமல் இந்திய ஒன்றிய அரசு எதுவும் செய்யப்போவதில்லை என உறுதியளித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தனது பார்வைக்கு வந்ததாகவும் கூறினார். அத்துடன், தமிழ்நாட்டு மக்களோடு நாங்கள் இருப்போம்; கவலை வேண்டாமென்றும் கூறினார்” எனவும் திருமாவளவன் தன்னுடைய பதிவில் கூறியுள்ளார்.

unknown node