”நெல் கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்படும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.!
நெல் கொள்முதலுக்கு இனி குவிண்டாலுக்கு ரூ.2,500 வழங்கப்படும் என முதலவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சேலம் : சேலம் சென்றுள்ளமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக நீரை திறந்து வைத்தார்.முதல் கட்டமாக விநாடிக்கு 3,000 கனஅடி நீரை திறந்து வைத்த முதல்வர் மலர் தூவி வரவேற்றார்.
அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு பின்னர் படிப்படியாக விநாடிக்கு 12,000 கனஅடியாக உயர்த்தப்படவுள்ளது. டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையை திறந்து வைத்த முதல்வர், சேலத்தில் நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்தார்.
பின்னர், அங்கு நடந்த அரசு விழாவில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,”விவசாயிகளுக்கு இனிமேல், ஒரு குவிண்டாலுக்கு ரூ.2,500 என நெல் கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்படும். இனி சாதாரண ரகத்திற்கு (குவிண்டால்) ரூ.2,500, சன்ன ரகத்திற்கு ரூ.2,545 கிடைக்கும். இதனால் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைவார்கள்
சாதாரண நெல் ரகத்துக்கு குவிண்டாலுக்கு ரூ.131, சன்ன ரகத்துக்கு குவிண்டாலுக்கு ரூ.156 என நெல் கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்படும். திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ சேலத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் மேற்கொள்ளப்படும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ”அதற்கு எடுத்துக்காட்டுகளாக, சேலம் உருக்காலை, 50 ஆண்டுகால கனவுத்திட்டமான சேலம் ரயில்வே கோட்டம், பெரியார் பல்கலைக்கழகம், அரசு மகளிர் கலைக் கல்லூரி, ஆத்தூர் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, கூட்டுக்குடிநீர் திட்டம், பாதாள சாக்கடைத் திட்டம், 9 உழவர் சந்தைகள், புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என பல்வேறு திட்டங்கள் அமைந்துள்ளன” என்று தெரிவித்தார்.