பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று காலை தொடங்குகிறது.
தமிழகம் முழுவதும் 12ஆம் வகுப்பு பொதுதேர்வுகள் இன்று தொடங்குகிறது. இதற்காக 3,169 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 8.8 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் இந்த பொதுத் தேர்வினை எழுத உள்ளனர். மாணவர்களுக்கு தேர்வு எழுதுவதற்கான அனைத்து வசதிகளையும் தேர்வு மையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
இதே போல் புதுச்சேரியிலும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் இன்று காலை தொடங்குகிறது. சுமார் 14,500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த தேர்வினை எழுதுகின்றனர். இதற்காக 40 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தேர்வு அறையில் மாணவர்கள் மற்றும் தேர்வு கண்காணிப்பாளர்களும் மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேர்வு எழுதும் மாணவ, மாணவியர்களுக்கு அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், தனது ட்வீட்டில் மாணவர்களுக்கு வாழ்த்து செய்தி பதிவிட்டுள்ளார். அவர் கூறியதாவது, தேர்வு என்பது உங்கள் அறிவையும், திறனையும் சோதிப்பவை அல்ல, அடுத்தகட்ட நகர்வுக்கான வழித்துணை தான்.
அச்சமின்றி, தன்னம்பிக்கையுடன் தேர்வு எழுதுங்கள், தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பெற்றோர்கள் அழுத்தம் தரவேண்டாம் என்று பதிவிட்டுள்ளார்.
unknown node