உலக நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.
சென்னை ஆலந்தூர் மண்டல அலுவலகத்தில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், தமிழ்நாடு முழுவதும் இன்று 26-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் 50,61,287 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 1.34 கோடி பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொள்ளாமல் இருக்கின்றனர். செங்கல்பட்டு, கோவை, கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் 100% பேருக்கு முதல் தவணை தடுப்பூசியை செலுத்தி சாதனை புரிந்துள்ளது.
99% முதல் தவணை தடுப்பூசிகள் போடப்பட்டு, மாநகராட்சிகளில் முதன்மையானதாக சென்னை மாநகராட்சி விளங்குகிறது. அதாவது, சென்னையில் இதுவரை 99% பேர் முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர் மற்றும் 81% பேர் 2வது தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் 100% இலக்கை நோக்கி தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உலக நாடுகளில் கொரோனா நோய்த்தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் ஜூன் மாதத்தில் கொரோனா 4வது அலை பரவ வாய்ப்பு இருப்பதாகவும் 4வது அலையை தடுக்க தடுப்பூசி ஒன்றே தீர்வு எனவும் அமைச்சர் தெரிவித்தார்.