கொரோனா வைரசால் நாடு முழுவதும் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து, கொரோனா தடுப்பூசி கடந்த சில மாதங்களாக உருவாக்கப்பட்டு வந்த நிலையில், இந்தியாவில் கோவிஷில்டு மற்றும் கோவாசின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் போட அனுமதி வழங்கப்பட்டது.
இதனால், கடந்த 16-ம் தேதி முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி அரசு சார்பில் போடப்பட்டு வருகிறது. இந்த கோவிஷில்டு மற்றும் கோவாசின் ஆகிய மருந்துகள் அரசு ஆரம்ப சுகாதாரத்துறை நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் 195 தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா தடுப்பூசி போட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 150-க்கும் மேற்பட்ட பணியாளர்களை கொண்ட தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா தடுப்பூசி போட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி தடுப்பூசி போட அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.