மொழிச் சமத்துவத்துக்கும் இந்தி ஆதிக்க எதிர்ப்பிற்கும் கிடைத்த முக்கிய வெற்றி இது என சு.வெங்கடேசன் எம்பி ட்வீட்.
தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 13 மாநில மொழிகளில் ஒன்றிய அரசின் ஆயுதப்படை காவலர் தேர்வு நடத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. முதல்முறையாக தமிழிலும் சி.ஆர்.பி.எஃப் தேர்வு நடைபெற உள்ளது. அதன்படி, ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மாநில மொழிகளில் மத்திய ஆயுதப்படை காவலர் தேர்வு 2024ம் ஆண்டு ஜனவரி 14-ல் நடைபெறுகிறது. தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகளில் தேர்வு நடத்தப்படும் நடைமுறை 2024 ஜனவரி முதல் அமல்படுத்தப்படும்.
மாநில மொழிகளில் தேர்வு நடத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்த நிலையில், தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரலாற்றில் முதல் முறையாக தமிழ், கன்னடம் உளப்பட 13 மாநில மொழிகளில் சி.ஆர்.பி.எஃப் தேர்வு நடைபெற உள்ளது. மாநில மொழிகளில் தேர்வு நடைபெறுவதால் பெருமளவு இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறார். இந்த நிலையில், தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் சி.ஆர்.பி.எஃப் தேர்வு என்பது தொடர் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என சு.வெங்கடேசன் எம்பி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான அவரது பதிவில், CRPF தேர்வுகளை தமிழில் எப்பொழுதும் நடத்தியதில்லை என இரண்டு நாள்களுக்கு முன்னர் சொன்னவர்கள், இன்று தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் அத்தேர்வு நடத்தப்படும் என அறிவித்துள்ளனர். மொழிச் சமத்துவத்துக்கும் இந்தி ஆதிக்க எதிர்ப்பிற்கும் கிடைத்த முக்கிய வெற்றி இது. ஆங்கிலம், இந்தியில் தேர்வு நடத்துவதால் மாணவர்களின் மதிப்பெண்கள் குறைவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஒரு தவறை நீண்ட நாள் செய்தால் மட்டும் சரியானதாக ஆகிவிடாது எனவும் கூறியுள்ளார்.
unknown node