ஆளுநருக்கு அதிமுக ஒரு கண்டனத்தையாவது தெரிவித்ததா? – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி

தமிழ்நாடு விளையாட்டுத்துறை சார்பில் சென்னையில் நடைபெற உள்ள ஃபார்முலா ரேசிங் சர்க்யூட் தொடக்க விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார்.

minister Udhayanidhi Stalin

தமிழ்நாடு விளையாட்டுத்துறை சார்பில் சென்னையில் நடைபெற உள்ள ஃபார்முலா ரேசிங் சர்க்யூட் தொடக்க விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், தெற்காசியாவில் முதல்முறையாக ஸ்ட்ரீட் சர்கியூட் பார்முலா 4 பந்தயம் சென்னையில் நடைபெறுகிறது. சென்னையில் டிசம்பர் 9 மற்றும் 10ம் தேதிகளில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெற உள்ளது என்றார்.

இதனைத்தொடர்ந்து பேசிய அமைச்சர், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு கையெழுத்திட மாட்டேன் என ஆளுநர் பேசியதற்கு அதிமுக ஒரு கண்டனத்தையாவது தெரிவித்ததா? என கேள்வி எழுப்பிய அவர், திமுக தைரியமாக எதிர்த்து வருகிறது என்றார். பாஜகவின் பிரதிநிதியான ஆளுநர் அதிமுக கூட்டணியில் தானே இருக்கிறார், ஏன் ஒரு கண்டணத்தைக்கூட அதிமுக தெரிவிக்கவில்லை எனவும் கேள்வி எழுப்பினார்.

மத்திய பாஜக அரசை எதிர்த்து அதிமுக மூச்சுவாது விட முடியுமா எனவும் கேட்டுள்ளார். ஆனால், நீட் தேர்வு ரத்துக்காக ஜனநாயக போராட்டத்தையும், அதே நேரத்தில் சட்ட போராட்டத்தையும் திமுக நடத்தி வருகிறது. நீட் தேர்வு விவகாரத்தில் திமுக தொடர்ந்து மாணவர்கள் பக்கம் நிற்கும், முதலமைச்சர் அவர்களுக்கு உறுதுணையாக நிற்பார், தொடர்ந்து சட்ட போராட்டத்தை நடத்தும் என கூறினார்.