திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அருகே படவேடு சுற்றுப்புற பகுதிகளில் தொல்பொருள் ஆய்வாளர்கள் சிலர் நேற்று முன்தினம் கள ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது, பழங்காலத்தில் உலோகங்களை உருக்கிப் பொருட்கள் செய்ய பயன்படுத்திய பாறைகள் இருப்பதை கண்டறிந்தனர். படவேட்டில் உள்ள தாமரை ஏரியின் தென்கரையில் இந்த உலோக உருக்குப் பாறை இருப்பதை கண்டறிந்தனர். இந்த பாறையில் சுமார் அரை அடி ஆழம் கொண்ட, 100க்கும் மேற்பட்ட உரல் போன்ற குழிகள் காணப்படுகிறது. ஏற்கனவே, 1990ம் ஆண்டு படவேட்டில் உள்ள அம்மையப்ப ஈஸ்வரம் கோயிலில் தோண்டும்போது அங்கிருந்து நாணயங்கள் செய்வதற்கான உருக்கு உலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
unknown nodeஇதன்மூலம் படவேட்டில் சம்புவராயர் ஆட்சி காலத்தில் உலோகங்களை உருக்குவதற்கான உலைக்களங்கள் இருந்துள்ளன என்பது தற்போது உறுதியாகிய்யுள்ளது. சோழப் பேரரசின் வீழ்ச்சிக்குப்பின், தொண்டை மண்டலத்தின் பெரும்பகுதியை ஆட்சி செய்தவர்கள் சம்புவராயர்கள். இவர்கள் காலத்தில் இஸ்லாமியர்களின் படையெடுப்பு மிகுந்திருந்தது. எனவே, படவேடு சம்புவராயர்களின் படைகள் தங்கி போர்ப்பயிற்சி செய்யும் இடமாகவும் போர்க்கருவிகள் செய்யும் இடமாகவும் இருந்திருக்க வேண்டும். எனவே, இந்தப் பாறையானது உலோகங்களை உருக்கிப் படைக்கருவிகள் செய்யும் இடமாக இருந்திருக்ககூடும். இப்பாறைக்கு அருகில் சுமார் 150 எக்டேர் பரப்பளவு கொண்ட தாமரை ஏரி ‘சம்புவராய அரசர்களால்’ உருவாக்கப்பட்டதாகும். உலோக உருக்குத் தொழிலுக்கு நீர் பெரும் ஆதாரமாகும். எனவே, அவர்கள் தாமரை ஏரிக்கரையில் உலோக உருக்கு கூடத்தை ஏற்படுத்தியுள்ளனர். இந்த உலோக உருக்குப்பாறைகள் கி.பி. 13ம் நூற்றாண்டை சார்ந்ததாக இருக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.