பள்ளிகள் திறக்கப்படுவதில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மனநிலையையும் ,கொரோனா தாக்கம் குறித்த உண்மை நிலையையும் உணர்ந்தே முடிவெடுக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவித்த நிலையில் நவம்பர் 16-ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்றும், அதிலும் 9-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அமமுக பொது செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான டிடிவி தினகரன் இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுவதில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் மனநிலையையும்,கொரோனா தாக்கம் குறித்த உண்மை நிலையையும் உணர்ந்தே தமிழகஅரசு முடிவெடுக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு, ‘எடுத்தோம்,கவிழ்த்தோம்’ என்று பள்ளிகளைத்திறந்து மாணவச்செல்வங்களின் உயிரோடு விளையாடுவது சரியாக இருக்காது‘.
தமிழ்நாட்டில் பள்ளிகளைத் திறப்பதற்கான சாத்தியகூறுகள் இப்போதைக்கு இல்லை’ என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சொன்ன அதே நாளில், பள்ளிகளைத் திறப்பதற்கான அறிவிப்பை முதலமைச்சர் வெளியிடுகிறார் என்றால் நிர்வாகத்தில் என்னதான் நடக்கிறது? அடுத்த சில மணிநேரங்களில் உகந்த சூழல் ஏற்பட்டுவிட்டதா? மிக முக்கியமான பிரச்சினையில் கூட ஏன் இவ்வளவு குழப்பம்? என்ற கேள்விகள் மக்களிடம் எழுந்திருக்கின்றன. ஆட்சியாளர்கள் இதனைப் புரிந்து நடந்து கொள்வார்களா?என்று குறிப்பிட்டுள்ளார்.
unknown nodeunknown nodeunknown node