EDRaid: புதுக்கோட்டை, நாமக்கல்லில் 2வது நாளாக அமலாக்கத்துறை சோதனை!

சட்டவிரோத சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாக வந்த புகாரின் அடிப்படையில், நேற்று தமிழ்நாட்டில் கரூர், திருச்சி, தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம், தி.மலை, புதுக்கோட்டை, கடலூர், திண்டுக்கல், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் பிரபல தொழிலதிபர்கள் வீடு அலுவலகங்களில் சோதனை நடத்தினர். அதன்படி, புதுக்கோட்டையில் தொழிலதிபர் சாலை ஒப்பந்ததாரர் ராமச்சந்திரன், திண்டுக்கல்லில் பிரபல தொழிலதிபர் ரத்தினம், தொழிலதிபர் கோவிந்தன் உள்ளிட்டவர்களுக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்றது.
மணல்குவாரி, பெட்ரோல் பங்க், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களை செய்து வரும் நிலையில், சோதனை நடப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில், புதுக்கோட்டை, நாமக்கல் மாவட்டங்களில் அமலாக்கத்துறை சோதனை இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தொழிலதிபரும், மணல் ஒப்பதாரருமான ராமச்சந்திரனுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
புதுக்கோட்டையில் ராமச்சந்திரன் வீடு, அலுவலகங்களில் இரண்டாவது நாளாக சோதனை நடைபெறுகிறது . ராமச்சந்திரன் உறவினர் வீரப்பனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் மோகனுர் அருகே செவிட்டுரங்கன்பட்டி மணல் கிடங்கில் அமலாக்கத்துறை 2வது நாளாக சோதனை நடத்தி வருகிறது. இதுபோன்று, திண்டுக்கல்லில் தொழிலதிபர் ரத்தினம் வீட்டில் அமலாக்கத்துறை 2ஆவது நாளாக சோதனை நடத்துகிறது.
மேலும், புதுக்கோட்டையில் பிரபல மணல் குவாரி உரிமையாளர் கரிகாலன் வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். திண்டுக்கல் தொழிலதிபர் ரத்தினத்தின் நெருங்கிய உறவினர் கரிகாலன் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மணல் குவாரிகளை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.