பொதுச்செயலாளர் தேர்தல்.. இன்று செய்தியாளர்களை சந்திக்கிறார் ஓபிஎஸ்!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பாக, இன்று காலை 11.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ஓ.பன்னீர் செல்வம்.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பாக, இன்று காலை 11.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ஓ.பன்னீர் செல்வம்.

ஒருங்கிணைப்பாளர்கள்:

அதிமுகவில் முன்னாள் முதலமைச்சரும் அக்கட்சி பொதுச்செயலாளருமான ஜெயலலிதா மறைவிற்கு பிறகு கட்சியில் பல்வேறு பிரச்சனைகள், சலசலப்புகள் ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சுமார் 4 ஆண்டுகள் தமிழ்நாடு முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி செயல்பட்டார். இதன்பின் அதிமுகவில்  பொதுச்செயலாளர் பதவிக்கு பதில் ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டு, அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக இபிஎஸ்-யும் செயல்பட்டு வந்தனர்.

இரட்டை தலைமை பிரச்சனை:

இதன்பின், சட்டமனற்ற தேர்தல் தோல்விக்கு பிறகு திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர், அதிமுகவில் இரட்டை தலைமை பிரச்சனை தொடங்கியது. இந்த இரட்டை தலைமை பிரச்சனை மெல்ல மெல்ல கட்சிக்குள் மாபெரும் பூதாகரமாக வெடித்தது. இதனால் அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இரு அணிகளாக பிரிந்தனர். இபிஎஸ் தான் கட்சியின் தலைமை ஏற்க வேண்டும் என்று ஒரு தரப்பும், ஓபிஎஸ் தான் கட்சிக்கு தலைமை வகிக்க வேண்டும் என்று மற்றொரு தரப்பும் கூறி வருகின்றனர்.

தீர்மானங்கள்:

இரட்டை தலைமை பிரச்சனை தீவிரமானதால், இருவரும் தனித்தனியே கூட்டம் கூட்டுவது, பொதுக்குழு கூட்டம் நடத்துவது என மாறி மாறி செயல்பட்டு வருகின்றனர். இந்த சமயத்தில் இபிஎஸ் தலைமையில் நடைபெற்று பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் கொண்டு வந்த தீர்மானங்களை ரத்து செய்துவிட்டு, ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி ஆகிவிட்டது, இபிஎஸ் தான் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

பொதுச்செயலாளர் தேர்தல்:

இதில் இருந்து, இரு தரப்பும் தனித்தனியே செயல்பட்டு வருகின்றனர். ஓபிஎஸ் தரப்பில் நான் தான் இதுவரை ஒருங்கிணைப்பாளராக இருக்கிறேன், பதவி காலாவதி ஆகவில்லை என ஓபிஎஸ் தெரிவித்துக்கொண்டு இருக்கிறார். அதுமட்டுமில்லாமல், அதிமுகவுக்கு விரைவில் பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த சமயத்தில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் மார்ச் 26ஆம் தேதி நடைபெறும் என அதிமுக தலைமை நேற்று அறிவித்தது.

ஓபிஎஸ் கருத்து:

இதற்கான வேட்புமனு தாக்கல் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இருப்பினும், எடப்பாடி பழனிசாமி தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யமாட்டார்கள் என்பதால் அவர் தான் பொதுச்செயலாளராக தேர்வவார் என கூறப்படுகிறது.  பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு குறித்து நேற்று ஓபிஎஸ் கூறுகையில், தற்போது எதுவும் கூற விரும்பவில்லை. இன்று விரிவான விளக்கம் தருகிறேன் என கூறினார்.

ஓபிஎஸ் செய்தியாளர் சந்திப்பு:

இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை 11.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார். பசுமையை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாக ஓபிஎஸ் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்திக்க இருக்கிறார்.