அதிமுக வேட்பாளர் தென்னரசுவை விட சுமார் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்றது. சித்தோடு அரசு பொறியியல் கல்லூரியில் வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வந்த நிலையில், 16 மேசைகளில் 15 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. 14 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் தொடர் முன்னிலையில் இருந்தார்.
இதன்பின், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் இறுதி கட்ட வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் 1,03,769 வாக்குகளை பெற்று வெற்றியின் விளிம்பில் இருந்தார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 41,268 வாக்குகளை பெற்று இருந்தார். தென்னரசுவை விட 63 ஆயிரம் வாக்குகளில் இளங்கோவன் முன்னிலை வகித்து வந்தார்.
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 1,10,556 வாக்குகள் பெற்று மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளார். அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு 43,553 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். அதிமுக வேட்பாளர் தென்னரசுவை 66,575 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
இந்த வெற்றியின் மூலம் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியை காங்கிரஸ் தக்க வைத்தது. மேலும், இந்த வெற்றியின் மூலம் 34 ஆண்டுகளுக்கு பிறகு சட்டப்பேரவைக்குள் ஈவிகேஎஸ் இளங்கோவன் நுழைகிறார். இந்த வெற்றிக்கு பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய இளங்கோவன், வெற்றி எதிர்பார்த்த ஒன்றுதான். இவ்வளவு பெரிய வெற்றியை நான் எதிர்பார்க்கவில்லை, இந்த வெற்றி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி. என்னை வெற்றி பெற வைத்த ஈரோடு மக்களின் குறைகளை தீர்க்க பாடுபடுவேன் என தெரிவித்துள்ளார்.