சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையில் நடந்த சோதனை நிறைவு.
சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு போக்குவரத்துக் கழக பணி நியமன முறைகேடு புகார் எதிரொலியாக, இந்த சோதனை நடைபெறுவதாக கூறப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜியின் இல்லம் மட்டுமில்லாமல், சென்னை தலைமை செயலகத்தில் அவரின் அறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதுவும் தலைமைச் செயலாளரிடம் அனுமதி பெறாமலேயே, சென்னை தலைமைச் செயலகத்தில் அத்துமீறி அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர் என திமுகவினர் குற்றசாட்டினர். தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியின் அறையில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தும் நிலையில், துணை ராணுவ படையினருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், சென்னை தலைமைச்செயலகத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் அறையில், சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்று வந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றுள்ளது.
இதனிடையே, தலைமை செயலகத்தில் நடந்த சோதனை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். அவர் கூறுகையில், ஒரு மாநில அரசின் மாண்பு காக்கும் தலைமைச் செயலகத்துக்குள் மத்திய காவல் படையை அழைத்து வந்து அதிகாரிகள் சோதனை நடத்துவதுதான் அரசியல்சட்ட மாண்பைக் காப்பதா? என கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்துள்ளார்.
