குற்றால அருவிகளில் குளிப்பதற்கான தடை தொடரும் என தென்காசி மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 5 வருடங்களுக்கு மேலாக நாடு முழுவதிலும் சுற்றுலாத்தலங்கள் பெரும்பாலும் அடைக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் சில சுற்றுலாத் தலங்களை திறப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டது. ஆனால், மீண்டும் கடந்த ஏப்ரல் மாதம் ஏற்பட்ட கொரோனா இரண்டாம் அலை காரணமாக அனைத்து சுற்றுலா தளங்களும் மூடப்பட்டது.
தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளதை அடுத்து தமிழகம் முழுவதிலும் உள்ள பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. குறிப்பாக ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் உள்ள தாவரவியல் பூங்கா மற்றும் படகு இல்லம் ஆகியவை திறப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அதுபோல மெரீனா உள்ளிட்ட கடற்கரைக்கு செல்வதற்கும் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ள கூடுதல் தளர்வுகள் காரணமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்திற்கு வரக்கூடிய பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் அங்கு மூடப்பட்டிருந்த கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் குற்றால அருவிகளில் குளிப்பதற்கு யாரும் செல்ல முடியாதபடி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், குற்றால அருவிகளில் குளிப்பதற்கான தடை நீடிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.