தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் வெள்ளப்பெருக்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சாலைகளிலும் நீர் தேங்கி காணப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு கன மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களிலும் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. நாளை அரியலூர், பெரம்பலூர், மதுரை, விருதுநகர், சிவகங்கை மற்றும் தூத்துக்குடியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் நாளை அதிகாலை மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.