ஆருத்ரா மோசடி வழக்கில் அனுப்பிய சம்மனை எதிர்த்து ஆர்கே சுரேஷ் தொடர்ந்த வழக்கு ஒத்திவைப்பு.
ஆரூத்ரா மோசடி வழக்கில் அனுப்பப்பட்ட சம்மனை எதிர்த்து நடிகரும், பாஜக நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், ஆருத்ரா மோசடி வழக்கில் அனுப்பிய சம்மனை எதிர்த்து ஆர்கே சுரேஷ் தொடர்ந்த வழக்கில் காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.
விசாரணைக்கு உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராகும்படி ஆர்.கே.சுரேசுக்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். ஆருத்ரா மோசடி புகாரில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் நடிகரும், பாஜக நிர்வாகியுமான ஆர்கே சுரேஷின் வங்கி கணக்குகளை முடக்கி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
